பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரம்.. திமுக MLA மகன், மருமகள் மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணை
சென்னை: பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சென்னை பல்லாவரம் பகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த கருணாநிதி.. இவரது மகன் ஆன்டோ மதிவாணன்- மெர்லினா தம்பதி சென்னை திருவான்மியூரில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

கடந்தாண்டு வீட்டு வேலை செய்ய இவர்கள் 17 வயது பட்டியலின சிறுமியை பணிக்கு அமர்த்தியுள்ளனர். கடந்த மாதம் அந்த 17 வயது மதிவாணன்- மெர்லினா தம்பதி மீது பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது.
பரபர புகார்: அதாவது மெர்லினா தன்னை கொடூரமாகத் தாக்கி துன்படுத்தியதாகவும் காலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து வேலை செய்யக் கட்டாயப்படுத்தியதாகவும் கூறினார். மேலும், தன்னை கொடூரமாகத் தாக்கியதாகவும் கூறிய அந்த சிறுமி தனக்கு ஏற்பட்ட காயங்களையும் காட்டினார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் புயலை ஏற்படுத்திய நிலையில், நெட்டிசன்கள் பலரும் மெர்லினா மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
அதன்படி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மார்லினா மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்கள். இதையடுத்து கடந்த மாதம் அவர்களை போலீசார் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர்.
ஜாமீன் மனு: இதற்கிடையே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளைத் தவறானவை என்பதை வலியுறுத்தி இருவரும் ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்த போது, அந்த பணிப்பெண்ணின் கல்வி செலவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் மனுதாரர்கள் செலவு செய்துள்ளனர் என்றும் சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே போலீசார அவசர கதியில் கைது செய்துள்ளதாகச் சொல்லி ஜாமீன் கோரப்பட்டது.
இருப்பினும், ஜாமீன் வழங்க பணிப்பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருப்பதால் அவர்களைக் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே உண்மை தெரிய வரும் என்று வாதத்தை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இன்று விசாரணை: மேலும், ஆன்டோ- மெர்லினா நீதிமன்ற காவல் முடிவடைய இருந்த நிலையில், அவர்களின் நீதிமன்ற காவலை இன்று பிப். 23 வரை நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சூழலில் தான் காவல் நிறைவடைவதால் அவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications