பல்லாவரம் ஐடி ஊழியர் தற்கொலை: ரூ.3.50 லட்சமில்லை.. வார வட்டியில் ரூ 80 லட்சம் கடன்.. பகீர் ட்விஸ்ட்!
சென்னை: பல்லாவரம் அருகே மனைவி, இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர் விவகாரத்தில் பல பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவரது மனைவி காயத்ரி (36). இவர்களுக்கு நித்ய ஸ்ரீ, ஹரிகிருஷ்ணன் ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர்.
பிரகாஷ் சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி காயத்ரி நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார்.

கடன் தொல்லை
இவர்களுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரம் அறுக்கும் மின் ரம்பத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரகாஷ், மனைவி, குழந்தைகளை மின் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

3.50 லட்சம்
வீட்டில் ரூ 3.50 லட்சத்திற்கு கடன் பத்திரம் கைப்பற்றப்பட்டதால் அவர்கள் கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் பிரகாஷுக்கு ரூ 80 லட்சம் கடன் இருப்பது தெரியவந்தது. வீடு கட்ட ரூ 27 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார்.

ரூ 80 லட்சம்
மேலும் கார் வாங்கவும் மனைவிக்கு நாட்டு மருந்து கடை வைத்ததில் நஷ்டத்தை சரி செய்யவும் கடன் வாங்கியதாக தெரிகிறது. பிரகாஷ் இதுவரை மொத்தம் 9 பேரிடம் ரூ 80 லட்சம் வரை கடன் பெற்று இருந்தாராம். இதனை அவர் வார வட்டிக்கு வாங்கியுள்ளார். ஆனால் போக போக பிரகாஷால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியதாக தெரிகிறது.

மன உளைச்சல்
இதனால் மனஉளைச்சலில் இருந்த பிரகாஷ், கடனை அடைக்க திணறி ஒரு கட்டத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என கருதி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் எந்த மாதிரியான நெருக்கடியை கொடுத்தார்கள் என்பதை அறிய போலீஸார் கடன் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications