பாமாயில் வாங்கிட்டீங்களா.. விர்னு ஏறிய மளிகை பொருட்கள் விலை.. து.பருப்பு மிரட்டுதே..கலங்கும் தமிழகம்
சென்னை: மளிகை பொருட்கள் விலையும் தமிழகத்தில் தாறுமாறாக எகிறி உள்ளது.. என்ன காரணம்? இந்த விலை உயர்வு எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பும் கவலையும் மக்களை கவ்வி வருகிறது.
தக்காளி விலை, தமிழகத்தில் கலக்கத்தை தந்து வருகிறது.. தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக விலை குறையாமல் உள்ளதால் இல்லத்தரசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், வரத்துக் குறைவு காரணமாக சென்னையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது.. அதிலும், துவரம் பருப்பின் விலை கிலோ 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.

என்ன காரணம்: ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உணவுத் தானியங்களின் விளைச்சல் குறைந்துள்ளதால்தான், தமிழ்நாட்டுக்கு வரும் மளிகைப் பொருட்களின் வரத்தில், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காரணம் சொல்கிறார்கள். எனினும், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. து.பருப்பை தவிர, பாசிப் பருப்பு போன்ற பருப்பு வகைகள் 20 முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளன.
இதோ விலை உயர்வு பட்டியல்
மளிகைப்பொருட்கள் முந்தைய விலை தற்போதைய விலை
துவரம் பருப்பு ரூ.118 ரூ.160
பாசிப்பருப்பு ரூ.135 ரூ.150
சீரகம் ரூ.365 ரூ. 540
மிளகு ரூ.450 ரூ.508
பாமாயில் ரூ.130 ரூ.85
சாதா பொன்னி (25 கிலோ) ரூ.900 ரூ.1,050
மீடியம் பொன்னி (25 கிலோ) ரூ.1,250 ரூ.1,500
பச்சரிசி ரூ.1,400 ரூ.1,500
பாமாயில்: இதில், சீரகத்தின் விலை, ஒரு கிலோ 365 ரூபாயில் இருந்து 540 ரூபாய்க்கு விற்பனை ஆகி, வயிற்றில் புளியை கரைக்க துவங்கி உள்ளது.. மிளகு கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. 130 ரூபாயாக இருந்த பாமாயில் விலை படிப்படியாக குறைந்து இப்போது 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இவைகளில், அரிசியை பொறுத்தவரை 6 மாதங்களுக்கு முன்பு 900 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 25 கிலோ எடை கொண்ட சாதா பொன்னி அரிசி மூட்டை, இப்போது ஆயிரத்து 50 ரூபாயாகவும், நடுத்தர பொன்னி அரிசி ஆயிரத்து 250ல் இருந்து ஆயிரத்து 500ஆகவும் அதிகரித்துள்ளது. 25 கிலோ எடை கொண்ட பச்சரிசி மூட்டையும் ஆயிரத்து 500ஆக உயர்ந்துள்ளது.
விளைச்சல் குறைவு: இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் தரப்பில் சொல்லும்போது, தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவை கருதி ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆனால், விளைச்சல் குறைந்திருப்பதால், தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
துவரம் பருப்பை பொறுத்தவரையில் மகாராஷ்டிரத்தில் இருந்தே பெருமளவு சரக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்கின் அளவு குறைந்திருக்கிறது. அதனால்தான் துவரம் பருப்பின் விலை அதிகமாக உள்ளது. வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது.
மிளகாய் தூள்: அதேபோல மிளகாய் தூள், சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நீட்டு மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. அரிசி விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களாலும், மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications