மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்.. தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு
சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இரு வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம் மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட்டுள்ளதாகவும், இந்த தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக கூறி, தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் செல்லும் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை என்பதாலும், வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தை கோரவில்லை என்பதாலும், தங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வைகோ தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வைகோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி மக்களவை தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானலும் அறிவிக்கலாம் என்பதால் தனது விண்ணப்பத்தை விரைந்து பரீசிலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.
இதையடுத்து, மதிமுக மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மதிமுகவுக்கு அனுமதி அளித்தனர்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டசபை தேர்தல் 2026 இல் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications