சபாஷ்.. சென்னை பிளாஸ்மா வங்கிக்கு முதல் தானம்.. சதன் பிரபாகர் எம்எல்ஏ முதல் ஆளாக வழங்கினார்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா சிகிச்சை பரிந்துரை செய்யப்பட்டு, அதில் வெற்றியும் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி ரூ. 2.34 கோடியில் அமைக்கப்பட்டது. அமைச்சர் விஜய பாஸ்கர் இந்த வங்கியை திறந்து வைத்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் ரத்த தானம் செய்யலாம் என்று தமிழக அரசு நேற்று கேட்டுக் கொண்டது. இதன்படி கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பரமக்குடி எம்.எல்.ஏ. என். சதன் பிரபாகர் முதல் ஆளாக ரத்த தானம் செய்தார்.

இந்த வங்கியில் 30 நிமிடத்தில் ஏழு பேர் 500 எம்.எல். ரத்தம் வழங்கலாம். அந்தளவிற்கு உயர் மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தம் எடுத்து, கொரோனா நோயாளிகளுக்கு அந்த ரத்தம் செலுத்தப்படும்.
இதுகுறித்து பேசி இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ''முதல்வரின் தொடர் முயற்சி காரணமாக பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயில் இருந்து மீண்டவர்கள் 14 நாட்களுக்குப் பின்னர் ரத்த தானம் செய்யலாம். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், ஆனால் அவர்களுக்கு பிற நோய்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எந்தவித பயமும் இல்லாமல் ரத்தம் வழங்கலாம்.
ஸ்டேன்லி மருத்துவமனை, ஓமந்தூரர் பல்நோய் மருத்துவமனை, எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி மற்றும் சேலம், கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மொத்தம் 26 நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களில் இதுவரை 24 பேர் குணமடைந்துள்ளனர்'' என்றார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்தான் முதன் முறையாக கொரோனா நோயாளிகளுக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு என்று 2000 படுக்கைகள் உள்ளன.












Click it and Unblock the Notifications