அரசு பள்ளியில் ஆன்மீக போதனை? மாணவர்களை அழ வைக்கும் மகா விஷ்ணு.. கொதிக்கும் நெட்டிசன்கள்.. சர்ச்சை!
சென்னை: சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகள் மத்தியில் மகா விஷ்ணு என்பவர் ஆன்ம தேடல் போதனைகளை செய்து வருவது சர்ச்சையாக வெடித்துள்ளது. அரசு பள்ளியில், ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த யார் அனுமதி கொடுத்தது என பெரும் விவாதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகா விஷ்ணு என்பவர், மாணவர்களிடம் ஆன்மீக தேடல் பற்றி வகுப்பு எடுத்துள்ளார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் அந்தப் பள்ளிகளில், தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகா விஷ்ணு, தன்னை உணர்தல் என்கிற ரீதியில் மாணவர்களிடம் பேசியுள்ளார்.

நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது, உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என மாணவிகள் உட்பட அனைவரையும் கண்ணை மூட வைத்து பாடலை ஒலிக்க விட்டு அவர்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசுகிறார் மகா விஷ்ணு. அவரது பேச்சில் மாணவிகள் பலர் உணர்ச்சி வசப்பட்டு அழுகின்றனர். இந்த வீடியோவையும் மகா விஷ்ணு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு பேசிக் கொண்டிருக்கும்போது, பள்ளி ஆசிரியர் ஒருவர், மகா விஷ்ணுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளியில் வந்து மறு பிறவி, பாவ புண்ணியம் பற்றி பேசுகிறீர்கள்.. அரசு பள்ளியில் ஆன்மீகத்தை போதிக்கிறீர்கள் என ஆசிரியர் வாக்குவாதம் செய்ய, அதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மற்ற ஆசிரியர்கள், சமாதானம் செய்து அந்த ஆசிரியரை அழைத்துச் சென்ற நிலையில் தொடர்ந்து தனது போதனை உரையை நிகழ்த்தி உள்ளார் மகா விஷ்ணு. அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டு வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நெட்டிசன்கள் பலரும், அரசுப் பள்ளியில் இதை அனுமதித்தது யார் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நபர் திராவிட சித்தாந்தத்திற்கு எதிரான செயல்பாடுகளை மூட நம்பிக்கைகளை மாணவர்களிடையே விதைக்கிறார் என்றும், அறிவியல்பூர்வமற்ற இதுபோன்ற மோசடிகளுக்கு எந்த அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் அனுமதி தரப்படுகிறது? என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது என்றும் நெட்டிசன்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தும் மகா விஷ்ணு என்பவர், சிறு வயதில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் காமெடி நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக செயல்பட்டுள்ளார். தற்போது, திருப்பூரை மையமாக கொண்டு பரம்பொருள் ஃபவுண்டேஷனை நடத்தி வருகிறார்.
இந்தியா முழுவதும் பல இடங்களுக்கும் சென்று ஆன்மீக வகுப்பு எடுத்து வரும் மகா விஷ்ணு, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்றுள்ளார். தற்போது, அரசுப் பள்ளிகளில் ஆன்மீக தேடல் சொற்பொழிவுகளை ஆற்றத் தொடங்கி இருப்பதால் பிரச்சனை பூதாகரமாகி உள்ளது.
சிறார் எழுத்தாளர் விழியன் என்கிற உமாநாத் செல்வன் இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இங்கே ஒரு பக்கம் பாடப் புத்தகம் தாண்டி வாசிக்க வேண்டும் என ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருக்கின்றோம். அதன் அவசியத்தை குழந்தைகள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் உணர வேண்டும் என மெனக்கெட்டுக்கொண்டு இருக்கின்றோம்.
ஒரு பக்கம் பாடப் புத்தகமும் வேண்டாம் உன்னை உணர் என மூளைச்சலவை செய்து, குழந்தைகளை அழ வைத்து பகுத்தறிவிற்கு எதிராக பள்ளிகளுக்குள் நுழைந்துகொண்டு இருக்கின்றனர். எப்படி எங்கே நுழைகின்றனர் என்பதும் எப்படி கல்வித்துறை இவற்றை அனுமதிக்கின்றது என்று தெரியவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications