பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பு.. வெளியானது அறிவிப்பு.. ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்
சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மேலும் 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த முதல் நிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. எடையார்பாக்கம் கிராமத்தில் இந்த நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. "நிலம் குறித்த பாத்தியதை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் போலவே பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றிய 20 கிராமங்களில் சுமார் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்காக பரந்தூர், வளத்தூர், பொடவூர், நல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகானபுரம் உள்ளிட்ட கிராங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறன. குடியிருப்புக்ள், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் வருவாய்த்துறை ஈடுபட்டுள்ளது. புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் விற்பதற்கான சிறப்பு வருவாய் துறை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டார மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல பரந்தூர் சுற்று வட்டார கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒருபக்கம் தொடர்ந்து எதிர்ப்பு உள்ள நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 67 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த முதல் நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், எடையார்பாக்கம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்திற்கான பாத்தியம் உள்ளவர்கள் தங்களது கோரிக்கை அல்லது ஆட்சேபனையை ஒரு மாதத்திற்குள் அதாவது 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சேபனைகள் மீதான விசாரணை ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications