"ஒன்றல்ல.. மொத்தம் இரண்டு.." பரந்தூர் ஏர்போர்ட்டில் 2 மெட்ரோ ஸ்டேஷன் வருதாம்.. என்ன காரணம்!
சென்னை: சென்னை பரந்தூரில் புதிய ஏர்போர்ட் வரவுள்ள நிலையில், அங்கே மொத்தம் இரண்டு மெட்ரோ ஸ்டேஷன்களை அமைக்கச் சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இப்போது மீனம்பாக்கத்தில் விமான நிலையம் உள்ளது. ஆனால் இடநெருக்கடியால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடியாத சூழல் இருக்கிறது. இதனால் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எளிதாகச் சென்று சேர மெட்ரோ ரயில் சேவையை அங்கே வரை நீட்டிக்கச் சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அருகே அமையும் மெட்ரோ நிலையங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
பரந்தூர் ஏர்போர்ட்: அதாவது பரந்தூர் ஏர்போர்ட் அருகே ஒன்றல்ல மொத்தம் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இருக்குமாம். சமீபத்தில் டிட்கோ இது குறித்த மேப்பை வெளியிட்டு இருந்தது. அதில் ஏர்போர்ட் எங்கே அமையலாம் என்பது குறித்து விளக்கப்பட்டு இருந்தது. ஏர்போர்ட்டில் ஒன்று நகரத்தின் பக்கமும் மற்றொன்று ஏர்போர்ட் பயணிகள் முனையத்தின் பக்கமும் இருக்கும் எனக் கூறப்பட்டு இருக்கிறது.
பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை 43.63 கிமீ நீளமுள்ளதாக அமையும் இந்த மெட்ரோ ரூட்டில் மொத்தம் 19 மெட்ரோ நிலையங்கள் இருக்கும். இந்த ரூட்டில் சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ் வேயை கடந்து, நகர் பகுதியில் முதலாவது ஸ்டேஷன் வரும். அதன் பிறகு மேற்கு பக்கம் திரும்பி பரந்தூர் ஏர்போர்ட் மல்டி லெவல் பார்க்கிங்கிற்கு அருகில் அதன் இரண்டாவது மெட்ரோ நிலையம் அமையும். பயணிகள் வசதிக்காக இந்த 2 மெட்ரோ நிலையங்கள் முடிவைச் சென்னை மெட்ரோ எடுத்துள்ளது.
ரூட் என்ன: ரூ. 10,712 கோடி மதிப்பிலான இந்த வழித்தடத்தின் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீஸ் செக்போஸ்ட்டில் இருந்து பாரந்தூர் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் இந்த ரூட் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
எங்கே அமைகிறது: இது குறித்து சிஎம்ஆர்எல் அதிகாரிகள் கூறுகையில், "சிட்டிக்குள் நெருக்கமாக மெட்ரோ ஸ்டேஷன்கள் அமைந்துள்ளன. நகருக்குள் குறைந்தது ஒரு கிமீ இடைவெளியில் மெட்ரோ ஸ்டேஷன்கள் உள்ளன. ஆனால், பரந்தூர் நகருக்கு வெளியே இருப்பதால் அதிக இடைவெளி விட்டே மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், அங்கே ரயிலை அதிக வேகத்தில் இயக்கலாம் என்றும் பரிந்துரைக்கிறோம். குறைவான மெட்ரோ நிலையங்கள் மற்றும் அதிக வேகத்துடன் இயக்கப்படுவதன் மூலம் பயணிகள் விரைவாக விமான நிலையத்தை அடைய முடியும்" என்று கூறுகிறார்கள்.
26.1 கிமீ கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பைபாஸ் வழித்தடத்தைத் தான் பரந்தூர் வரை நீட்டிக்கச் சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த ரூட்டில் பவர்ஹவுஸ்- பூந்தமல்லி பாதை 2025 இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. பரந்தூர் விமான நிலையத்தைத் திறக்கும் போதே அதை மெட்ரோவுடன் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஏன் உதவும்: இந்த புதிய விமான நிலையத்திற்கு மெட்ரோ இணைப்பு கிடைத்தவுடன், நகரத்திலிருந்து பயணிகள் மிக எளிதாக மெட்ரோ ரயில் நிலையத்தை அடையலாம். உதாரணமாக மீனம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள லைனை மாற்றி பரந்தூரை அடையலாம்.. பரந்தூர் ஏர்போர்ட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையம் 2029க்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது.
பரந்தூர் ஏர்போர்ட் வந்த பிறகும் மீனம்பாக்கம் ஏர்போர்ட் தொடர்ந்து இயங்கும் என்பதால் மீனம்பாக்கத்தில் வந்து இறங்கும் பயணிகளுக்கு மிக எளிதாக பரந்தூருக்கு மெட்ரோ மூலம் செல்ல முடியும்.
என்ன காரணம்: மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இட நெருக்கடி அதிகம் இருப்பதே இந்த புதிய ஏர்போர்ட் அமைய முக்கிய காரணமாகும். நகரத்தில் இருந்து தொலைவில் அமையும் பரந்தூர் ஏர்போர்ட் அதிக சர்வதேச விமானங்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மற்ற நகரங்களில் இருந்து மீனம்பாக்கத்திற்கு வரும் உள்நாட்டு விமானப் பயணிகள், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் செல்ல பரந்தூர் ஏர்போர்ட் செல்ல இந்த மெட்ரோ ரூட்டை பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications