போச்சு.. தாமதம் ஆகிறது பரந்தூர் விமான நிலைய பணிகள்.. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்.. ட்விஸ்ட்
சென்னை: சென்னைக்கு இரண்டாவது விமான நிலையமாக வரவிருக்கும் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம், ஓராண்டு தாமதமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சவால்களே இந்த தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஏகாம்பரபுரம் கிராமத்தில் ஓடுபாதை அமையவுள்ள நிலையில், அக்கிராம மக்கள் நிலம் வழங்க மறுத்து வருகின்றனர். இது ஒப்பந்தப் புள்ளிகளை (டெண்டர்கள்) கோருவதிலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அரசு தரப்பு வட்டாரம் வெளியிட்டுள்ள தகவலில், "டெண்டர்கள் விரைவில் கோர திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கு குறிப்பிடத்தக்க அளவிலான நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். ஏகாம்பரபுரம் மக்கள் இன்னும் டெண்டரில் பங்கேற்காததாலும், முக்கிய ஓடுபாதை அங்கேயே வருவதாலும், நிலம் கையகப்படுத்துவது கணிசமாக தாமதமாகும். இதன் விளைவாக, டெண்டர்களும் இப்போது கோரப்பட முடியாது," எனக் கூறியது.

பரந்தூர் விமான நிலையம்
தமிழ்நாடு அரசு சமீபத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருந்தாலும், ஒரு சிலரே நிலங்களை வழங்க முன்வந்துள்ளனர். ஆனால், திட்டத்திற்குத் தேவையான பெரும்பகுதி நிலம் இன்னும் அரசின் வசம் வரவில்லை. முதலில், தமிழ்நாடு அரசு அக்டோபர் 2025-க்குள் நிலம் கையகப்படுத்துதலையும், ஜனவரி 2026-க்குள் ஆரம்பகட்டப் பணிகளையும் முடித்து, டிசம்பர் 2028-க்குள் முதல் கட்டத்தை முடிக்க திட்டமிட்டிருந்தது.
தற்போது, ஒப்பந்தப் புள்ளிகளே அடுத்த ஆண்டுதான் கோரப்படும் என்றால், திட்டத்தின் முழுமையான நிறைவு டிசம்பர் 2029 அல்லது 2030-ன் தொடக்கம் வரை ஒரு வருடம் தள்ளிப்போகக்கூடும். சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான வழிகாட்டுதல் குழுவின் கூட்டம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதற்காக, தமிழ்நாடு அரசு தொடர்ச்சியான அறிக்கைகளை முன்கூட்டியே வழங்க வேண்டியிருந்தது.
பரந்தூர் விமான நிலைய பணிகள் தாமதம்
பரந்தூரில் அமையவுள்ள இந்த விமான நிலையத்திற்குத் தேவையான 3,774 ஏக்கர் தனியார் நிலத்தையும், 1,972 ஏக்கர் அரசு நிலத்தையும் டிசம்பர் மாதத்திற்குள் கையகப்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதுதான் தள்ளிப்போய் உள்ளது.
தமிழக அரசு தரப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், "2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி, இரண்டு ஆண்டுகளில் முதல் கட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார். பணிகள் திட்டமிட்டபடி நடந்தால், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டு, 2028-க்குள் முதல் கட்டம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 2 கோடி பயணிகள் வரை கையாள முடியும்" என்றுள்ளார்.
அடுத்த ஆண்டு கிடைக்கும் சுற்றுசூழல் அனுமதி
ஆனால், சுற்றுச்சூழல் அனுமதியும் அடுத்த ஆண்டுதான் கிடைக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுற்றுச்சூழல் அனுமதிக்குத் தேவையான ஆய்வை முடிப்பதற்கு மேலும் கள ஆய்வுத் தரவுகள் தேவைப்படுவதே இதற்குக் காரணம். இந்தத் தரவுகளைச் சேகரிக்க, ஆலோசகர்கள் ஏகாம்பரபுரம் கிராமத்திற்குள் செல்ல வேண்டியுள்ளது. நீர்வளத் துறை பரிந்துரைத்த நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்வளவியல் அறிக்கை குறித்த திட்டங்களை மாநில அரசு வகுத்து வருகிறது.
நான்கு கட்டங்களைக் கொண்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு ரூ. 27,400 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள சுமார் 20 கிராமங்களில் 5,369 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications