பள்ளி சீருடைகள் வாங்க அலைமோதிய பெற்றோர்கள்.. துணிக்கடைகளில் கதவுகளை மூடி வைத்து நடந்த வியாபாரம்
திருப்பூர்: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி செல்லும் தன் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்க பெற்றோர்கள் கடைகளில் குவிந்தனர். பள்ளி சீருடைகள், நோட்டுகள் என பல்வேறு பொருட்களை வாங்க குவிந்ததால் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக்கடைகளில் பள்ளி சீருடைகள் வாங்கவும் பெற்றோர்கள் குவிந்ததால், ஒரு சில துணிக்கடைகளில் கதவுகளை மூடி வைத்தும் வியாபாரம் நடந்தது.
தமிழகத்தில் கடந்த மாதம் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் விடப்பட்டன. கோடை விடுமுறை முடிந்து இன்று அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன.

பள்ளிகள் இன்று திறப்பு
வழக்கமாக கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்கும் இதனால், பள்ளி திறப்பு ஒருசில நாட்கள் தள்ளி போகும். ஆனால் இந்த ஆண்டு கோடை வெப்பம் தணிந்து விட்டது. இதனால் திட்டமிட்டபடி இன்று திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுவிட்டன. அந்த வகையில் இன்று பள்ளிக்கு மாணவ - மாணவிகள் உற்சாகமாக திரும்ப இருக்கின்றனர்.
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள், உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுமட்டுமல்லாமல், புதிய வகுப்பறைகளில் பள்ளிப்படிப்பை ஆரம்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கும் வகையில் சில பள்ளிகளில் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடைகளில் கூட்டம்
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நோட்டு, பேக், பேனாக்கள் உள்ளிட்டவை வாங்க கடை வீதிகளில் அலைமோதினர். பள்ளி சீருடை வாங்கவும் துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆயத்த ஆடைகளுக்கு பெயர் போன திருப்பூரில் மொத்த கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
திருப்பூரின் முக்கிய கடை விதிகளில் பெற்றொர்கள் சீருடைகள் எடுக்க சாரை சாரையாக வந்தனர். நேற்று மாலை நேரத்தில் எல்லாம் கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதனால், துணிக்கடைகளில் வியாபாரம் செய்ய முடியாமல் கடை ஊழியர்கள் திணறினர்.
கதவுகளை மூடி வைத்து வியாபாரம்
ஒரு கட்டத்தில் கதவுகளை மூடி வைத்தும் சில கடைகளில் வியாபாரம் நடைபெற்றது. நேற்று இரவு வரை இதே நிலைமை பல இடங்களில் காணப்பட்டது. மூடப்பட்ட கடைகளுக்கு முன்பாக பெற்றோர்கள் காத்திருந்து வாங்கி சென்றதை காண முடிந்தது. சிலர் தங்கள் பிள்ளைகளையும் சீருடை வாங்க அழைத்து வந்து இருந்தனர். இதனால் மாணவ - மாணவிகளும் தங்களுக்கு பிடித்ததை அவர்களே தேர்வு செய்து மகிழ்ந்தனர்.
விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவ மாணவிகளும் பெற்றோர்களுடன் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு நேற்று கிளம்பினர். நேற்று ஒரே நாளில் அதிகளவில் மக்கள் சென்னை திரும்புவதால் இரவு நேரத்திலேயே சென்னை செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிற்கு நாளை மாணவ - மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல இருப்பதால், அவசரமின்றி அவர்களை சீக்கிரமாகவே புறப்பட வைத்து முன்கூட்டியே சென்று பள்ளிகளில் விட்டுவிடுங்கள். நாளை முதல் நாள் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications