காணும் பொங்கல்: சென்னையில் 15 இடங்களில் பார்க்கிங் ஏற்பாடுகள்.. வண்டிகளை இங்கே நிறுத்துங்க..!
சென்னை: காணும் பொங்கலை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மெரினா கடற்கரையில் அதிகளவில் கூட்டம் கூடும் என்பதால் அப்பகுதியில் 15 வாகன நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தைத் திருநாள் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். மேலும் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலையொட்டி கோவில்கள், சுற்றுலா தலங்களில் மக்கள் அதிகம் கூடுவார்கள். எனவே, சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காமராஜர் சாலையில் பொதுமக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.
மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து ( War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் ( Light House) நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு (Compulsory Left Diversion) பாரதி சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ( விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படும்) வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் வாகன நிறுத்தம் இடத்தின் ஏற்பாடுகள்
1. ஃபோர்ஷோர் சாலை
2. விக்டோரியா வார்டன் விடுதி
3. கலைவாணர் அரங்கம் பார்க்கிங்
4. பிரசிடென்சி கல்லூரி
5. மெட்ராஸ் பல்கலைக்கழகம்
6. டிடி கேந்திராவிற்கு அப்பால் ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை)
7.MRTS - சேப்பாக்கம்
8. லேடி வெலிங்டன் பள்ளி
9. ராணி மேரி மகளிர் கல்லூரி
10. சீனிவாசபுரம் லூப் ரோடு / மைதானம்
11. PWD மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்)
12. செயின்ட் பீட் மைதானம்
13. அன்னை சத்யா நகர்
14. ஈ.வி.ஆர்.சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்)
15. தலைமைச் செயலகத்தின் உள்ளே (காவல்துறை வாகனங்கள்)
ஆகிய இடங்களில் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காணும் பொங்கலுக்காக மெரினா கடற்கரை செல்லும் பொதுமக்கள் இவற்றை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications