அரசியல் கட்சியை தொடங்கினால் "இந்த" பெயரைத்தான் வைப்பேன்.. பார்த்திபன் பரபரப்பு தகவல்
சென்னை: அரசியல் கட்சியை தொடங்கினால் அதற்கு தான் இந்த பெயரைத்தான் வைப்பேன் என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
சினிமா நடிகர்கள் பலர் அரசியல் கட்சியை தொடங்கும் முனைப்பில்தான் உள்ளனர். இன்னும் சிலர் ஏற்கெனவே உள்ள அரசியல் கட்சிகளில் இணைந்து விட்டனர்.
இதற்கு உதாரணமாக நிறைய பேரை சொல்லலாம். ஆனால் கட்சி தொடங்கியவர்களில் கமல் உதாரணமாக உள்ளார். ரஜினி அடுத்த மாதம் தொடங்கவுள்ளார். அது போல் விஜய், சிம்பு, சூர்யா உள்ளிட்டோரையும் அவரவர் ரசிகர்கள் அரசியல் கட்சியை தொடங்க அழைத்து வருகிறார்கள்.
அரசியலுக்கு வர வேண்டும்
அந்த வகையில் நடிகர் பார்த்திபனும் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் கூறுகையில் அரசியல் ஆர்வம் எனக்கு உள்ளது , எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கதையம்சம்
எப்போதுமே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் பார்த்திபனுக்கு நிகர் அவரே. கடந்த ஆண்டு அவர் எடுத்த படத்திற்கு பெயர் ஒத்த செருப்பு. நல்ல வரவேற்பை பெற்றது. இதை அவர் உலக தரத்திற்கும் உயர்த்தினார். இந்த படத்திற்கு புதுவை அரசு விருதும் வழங்கியது.
புதிய பாதை
அப்படிப்பட்ட பார்த்திபன் தான் அரசியலுக்கு வந்தால் அதற்கு என்ன பெயர் வைப்பேன் என்பதையும் இப்போதே தெரிவித்துவிட்டார். அவர் தொடங்கும் அரசியல் கட்சிக்கு புதிய பாதை என்ற பெயரை வைப்பாராம். புதிய பாதை அவர் இயக்கி நடித்த முதல் படமாகும்.
தேசிய விருதுகள்
இந்த படம் 1989-இல் திரைக்கு வந்தது. தவறான உறவுகளால் குழந்தை பெற்று அதை ஆதரவற்ற நிலையில் தூக்கி எறிவதை சுட்டிக் காட்டும் வகையில் இந்த கதை அமைந்திருக்கும். இந்த படத்திற்கு இரு தேசிய விருதுகள் கிடைத்தன. பார்த்திபனின் கட்சி பெயர் அறிவிப்பால் அவரது ரசிகர்களும் நண்பர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். தற்போதுள்ள அரசியல் நிலவரங்களுக்கேற்ப இந்த பெயர் நன்றாகத்தான் இருக்கிறது.