“99 வயது வரை எப்படி வாழ்வது என சொல்லித் தருவதாக சொன்னார்”.. நடிகர் ராஜேஷ் பற்றி பார்த்திபன் உருக்கம்
சென்னை: நடிகர் ராஜேஷ் இன்று காலமான நிலையில், அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன். கடந்த வாரம் ஒரு நிகழ்வில் சந்தித்தபோது நடிகர் ராஜேஷ் தன்னிடம் பேசிய விஷயம் பற்றி உருக்கமாகப் பகிர்ந்துள்ளார் பார்த்திபன்.
மூத்த நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75. 'கன்னிப் பருவத்திலே' படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

1974-ம் ஆண்டு கே. பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 'கன்னி பருவத்திலே', 'அச்சமில்லை அச்சமில்லை' ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் ராஜேஷ் பற்றி, அவருடன் நெருங்கிப் பழகிய நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனியார் தொலைக்காட்சிக்கு பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த வாரம் ராஜேஷை சந்தித்தபோது அவர் பேசியது குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் பார்த்திபன்.
பார்த்திபன் பேசுகையில், "தினந்தோறும் ஒரு டாக்டர் உடன் அமர்ந்து உடல்நிலையை பாதுகாப்பாது பற்றி பேசுவார். ஐசரி வேலன் மகள் திருமணத்துக்கு நான் சென்றிருந்தபோது கடைசியாக நான் அவரைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம்.. பார்த்திபன் சார் நீங்க என் வீட்டுக்கு வாங்க.. 99 வயது வரை எப்படி வாழ்வது என நான் கற்றுத் தருகிறேன். நூறாவது வயது உங்களின் பொறுப்பு என ஜோக் அடித்தார். அவ்வளவு தூரம் அவர் உடல்நிலை பற்றி கவனத்தில் கொள்கிறவர். மற்றவர்களின் உடல்நிலை பற்றியும் அக்கறை கொண்டிருக்கும் மனிதர்.
பாக்கியராஜ் சார் நிகழ்வின்போது நடிகர் ராஜேஷ் பேசும்போது, எல்லோரும் முடி கொட்டிவிட்டது என வருத்தப்படுவார்கள். நான் முடி கொட்டலையே.. கருப்பாகவே இருக்கிறதே என வருத்தப்படுகிறேன் என்று சொன்னார். நாங்கள் பேசும்போதெல்லாம் ஆரோக்கியம் பற்றி பேசுவார். நாங்கள் சினிமாவை தாண்டி நிறைய பேசுவது ஆரோக்கியமான வாழ்வு, நீண்ட ஆயுள் பற்றித்தான்.
சினிமா துறை பற்றி ஆழ்ந்த அறிவு உள்ளவர் ராஜேஷ். கன்னிப் பருவத்திலேயே படத்தில் முதல் முதலில் அவர் நடித்தபோது நான் டப்பிங் பேச சென்றிருந்தேன். அப்போது முதலே பழக்கம். ராஜேஷ் இன்னொரு சிவாஜி சார். கடைசி வரை மற்றவர்களின் ஆரோக்கியம் பற்றியே பேசிக்கொண்டிருந்த நல்ல மனிதர் ராஜேஷ்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications