மின்சார ரயிலில் திடீரென கிளம்பிய புகை.. சென்னை கிண்டி ஸ்டேஷனில் அலறியடித்து ஓடிய மக்கள்! ஷாக்
சென்னை: சென்னை கிண்டி ரயில்வே ஸ்டேஷனில் மின்சார ரயிலின் பெட்டியில் இருந்து குபுகுபுவென வந்த புகையால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் பின்னணி காரணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த ரயிலில் தினமும் ஏராளமானவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் மின்சார ரயிலின் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்றும், நாளையும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இன்றைய தினம் தண்டவாள பராமரிப்பு பணியை தொடர்ந்து மதியம் 3 மணிக்கு மின்சார ரயில் இயங்க தொடங்கியது. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலின் ஒரு பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து குபுகுபுவென புகை கிளம்பியது.
இதையடுத்து உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ரயில் நிறுத்தப்பட்டது. புகை வந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி ரயிலில் இருந்து வேகமாக இறங்கி ஓடினர். இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து புகை வந்த பெட்டியை ஆய்வு செய்தனர்.
அப்போது ரயிலின் பிரேக் பாயிண்ட் பகுதியில் திடீரென ஏற்பட்ட பழுதால் புகை கிளம்பியதும், அதிர்ஷ்டவசமாக தீவிபத்து எதுவும் ஏற்படாததும் தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு ரயில் பெட்டியின் பிரேக் பாயிண்ட்டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தனர். இதையடுத்து மீண்டும் அந்த ரயில் அங்கிருந்து புறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
புகை காரணமாக ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் மீண்டும் பெட்டிகளில் ஏறி அமர்ந்த நிலையில் தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் 15 நிமிடங்கள் தாமதாக புறப்பட்டது. முன்னதாக இந்த சம்பவம் காரணாக கிண்டி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.












Click it and Unblock the Notifications