ஏசி இல்ல, ஃபேன் ஓடல.. தென்காசி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் நிறுத்திய பயணிகள்.. என்னாச்சு
சென்னை: தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை சென்ற சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பெட்டியில் ஃபேன் ஓடவில்லை, லைட் எரியவில்லை, தண்ணீர் இல்லை, ஏசி வரவில்லை என்று கூறி பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நடுவழியில் நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து இரண்டரை மணி நேரம் தாமதமாக அந்த ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைதோறும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் 4.30 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு மறுநாள் காலை 9.35க்கு சென்றடையும்.

நடு வழியில் ரயிலை நிறுத்திய பயணிகள்
அந்த வகையில் நேற்று சனிக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. அப்போது ஏசி பெட்டி ஒன்றில் ஏசி வேலை செய்யவில்லை என பயணிகள் தெரிவித்தனர். மேலும் ரயிலின் அந்த பெட்டியில் தண்ணீர் வரவில்லை. லைட்டுகளும் எரியவில்லை என்று பயணிகள் கூறினர். இது தொடர்பாக பயணிகள் பயணிகள் பாதுகாப்பு எண்ணுக்கு கால் செய்து கூறினர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ரயில் புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையம் வரும் வரை பயணிகள் கரண்ட் இல்லாமல் இருந்ததால் பயணிகள் கடும் கோபமடைந்தனர். இதனால் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் ரயில்வே போலீசார் அங்கு வந்து யார் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர் என்பது குறித்து கேட்டனர்.
2.30 மணி நேரம் தாமதம்
அப்போது பயணிகள் பலரும், இந்த பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை, தண்ணீர் வரவில்லை. பேன்கள் ஓடவில்லை, லைட்டுகள் எரியவில்லை என்று கூறினர். மேலும் ரயில் கிளம்பும் போதே எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செக் செய்யாமல் ஏன் வந்தீர்கள் என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். ஒரு பயணி கூறுகையில், "தண்ணீர் வருகிறதா, ஏசி ஒர்க் ஆகிறதா? கரண்ட் வருகிறதா என்று செக் செய்துவிட்டு வரமாட்டீங்களா?.." என்று கேள்வி எழுப்பினார்.
எனினும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும் உடனடியாக அந்த ஏசி பெட்டியில் பழுதுகள் சரிபார்க்க ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து பழுதுகள் சரி செய்யப்பட்டு 2.30 மணி நேர தாமதத்திற்கு பிறகு ரயில் கிளம்பியது.
ரயிலில் ஏசி ஓடவில்லை, ஃபேன்கள் ஓடவில்லை என்று கூறி பயணிகள் ரயிலை நடுவழியில் நிறுத்திய சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று ரயில் 2.30 மணி நேரம் தாமதம் ஆனதால் அதில் பயணித்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.












Click it and Unblock the Notifications