பட்டா ஆவணம் வேற மாதிரி இருக்கா? பத்திரம், பட்டாவில் பிழை? வங்கி கடன் வாங்க முடியல: அரசுக்கு கோரிக்கை
சென்னை: பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் நிறைய பிழைகள் உள்ளதாகவும், இதை உடனடியாக சரிசெய்யவும், பிழைகளை திருத்தவும், தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில் மீண்டும் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு துறை தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டது.. அதேபோல, ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தும் கைமாறும் நிலையில், பத்திரப்பதிவு நிலையிலேயே தானியங்கி முறையில், பட்டா மாறுதல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது..

நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள்
இதற்காக சார் - பதிவாளர் அடையாள சான்றுகளை சரிபார்த்தால் போதும். அதன் அடிப்படையில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, புதிய உரிமையாளர் பெயரில் பட்டா, ஆன்லைனில் கிடைத்துவிடும். எனினும், இந்த பட்டாவில் பெயர், மனை அளவு போன்ற விஷயங்களில், சிறு பிழைகள் அவ்வப்போது ஏற்பட்டுவிடுகின்றன.
பத்திரம், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், கணினியில் உள்ளீடு செய்யப்படும் நிலையில், பரப்பளவு, பெயர் போன்றவற்றில் வித்தியாசம் இருந்தால், சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிடும். இந்த பிழைகளை உடனடியாக சரி செய்தால் மட்டுமே, விண்ணப்பத்தை கணினி ஏற்கும்.
பட்டாக்களில் பிழைகள்
ஆனால், பட்டாக்களில், பரப்பளவு உள்ளிட்ட விபரங்களில் பிழை இருப்பதால், அதனை திருத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தால், பெரும்பாலான வருவாய் கோட்டாட்சியர்கள், வேலைப்பளுவை காரணம் காட்டி கிடப்பில் போட்டுவிடுகிறார்களாம்.
இதனால், கட்டுமான திட்ட அனுமதி பணிகள் பாதிக்கப்படுவதால், பட்டா பிழையை சரிசெய்ய வருவாய் துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார்.
வேண்டுமென்றே பிழைகளை ஏற்படுத்துகிறார்களா?
இந்நிலையில், பி.மணிசங்கர் மீண்டும் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். "அனைத்து ஆவணங்களையும் முழுமையாக சரிபார்த்த பிறகு வழங்கப்படும் பட்டாக்களில், சிறு பிழைகள் காணப்படுகின்றன. வருவாய் துறையில் உள்ள அதிகாரிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு, இதுபோன்ற பிழைகளை ஏற்படுத்துகிறார்கள்.. அப்போது தான் அதை சரிசெய்ய, மக்கள் தங்களை தேடி வருவார்கள் என்ற நோக்கத்தில் இப்படி செய்கிறார்கள். இதை சரிசெய்ய விண்ணப்பிக்க முன்வரும்போதும் மக்களை அலைக்கழிக்கிறார்கள்.
இதில், உயரதிகாரிகளை சந்திப்பதற்கும், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், வீடு மனை வாங்கியவர்கள், புதிய கட்டிட அனுமதி, வங்கிக்கடன் பெற முடியாமல் தவிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
விரைவில் முகாம் நடத்த முடிவு?
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி தரப்பில் சொல்லும்போது, "பட்டாக்களில் காணப்படும் எழுத்து பிழைகளை சரிசெய்ய, விண்ணப்பங்கள் அதிகமாக வருவதால், வழக்கமான பணிகளுடன் சேர்ந்து, இதன் மீது நடவடிக்கை எடுப்பதில், சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அந்தவகையில், பட்டாவில் உள்ள பிழைகள் விரைவில் களையப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications