பட்டா ஆவணங்களில் பிழையா? பத்திரத்தில் அளவு வித்தியாசமா இருக்கே? தமிழக வருவாய்த்துறைக்கு கோரிக்கை
சென்னை: பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் நிறைய பிழைகள் உள்ளதாகவும், இதை உடனடியாக சரிசெய்யவும், பிழைகளை திருத்தவும், தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.
வீடு, நிலம் வாங்குபவர்கள் தங்களது பட்டாவை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.. நிலத்தின் உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற விவரங்கள் இந்த பட்டாவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

எப்போதுமே பிழையில்லாத பட்டாவை வைத்திருக்க வேண்டும். ஒன்றிரண்டு தட்டச்சு பிழைகள் இருந்தாலும், அதை சரிசெய்து விட வேண்டும். அந்த நேரத்தில் இதனால் சிக்கல் வராது என்றாலும், பின்னாளில், நிச்சயம் இடர்பாடு வரலாம். எனவே, சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்த பிழையை, குறைந்தபட்ச கட்டணத்தில் சரிசெய்து கொள்ளலாம்.
ஆனால், ஏற்கனவே, உங்களுக்கு ஆவணம் தயார் செய்தவர்தான், இந்த பிழையை திருத்த வேண்டும். இதற்காகவே "பிழை திருத்தல் பத்திரம்" (Rectification Deed) உள்ளன..
பத்திரப்பதிவு பட்டாக்களில் பிழைகள்
இந்நிலையில், பத்திரப்பதிவு பணிகள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், பட்டாக்களில் பிழைகளை சரிசெய்ய விண்ணப்பித்தால், அதனை வருவாய் துறையில் கிடப்பில் போடப்படுவதாகவும், இதனால், கட்டுமான திட்ட அனுமதி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அதாவது, பத்திரம், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், கணினியில் உள்ளீடு செய்யப்படும் நிலையில், பரப்பளவு, பெயர் போன்றவற்றில் வித்தியாசம் இருந்தால், சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும்... இந்த பிழைகளை சரி செய்தால் மட்டுமே, விண்ணப்பத்தை கணினி ஏற்கும்.
கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
ஆனால், கடந்த சில வருடங்களாகவே, பட்டாக்களில், பரப்பளவு உள்ளிட்ட விபரங்கள் பிழை இருப்பதால், அதனை திருத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தால், பெரும்பாலான வருவாய் கோட்டாட்சியர்கள், வேலைப்பளுவை காரணம் காட்டி கிடப்பில் போடுகிறார்களாம்..
எனவே, பட்டா பிழையை சரிசெய்ய வருவாய் துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கோரிக்கை விடுத்திருந்தார்.
தனி வெப்சைட் தேவை
இதுகுறித்து ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.தர்மராஜன் ஒரு சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், "பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாறியபிறகு, பிழைகள் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. 60 சதவீத பட்டாக்களில் பிழைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆனால், அடுத்தடுத்த பரிமாற்றம், வங்கிக்கடன், கட்டட அனுமதி போன்ற விஷயங்களுக்கு செல்வோர் மட்டுமே புகார் செய்கிறார்களே தவிர, மற்றவர்களுக்கு இப்படி பிழைகள் இருப்பதே தெரியாமல் உள்ளனர்.
எனவே, இதற்கெனவே ஒரு வெப்சைட்டை உருவாக்கி, வருவாய் துறையிடமுள்ள பட்டா விபரங்களை வெளியிட வேண்டும். பிழையான பட்டாக்கள் தொடர்பான சரியான விபரங்களுக்கான ஆதாரங்களை, பொது மக்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனடிப்படையில் வருவாய் துறை அலுவலர்கள் பிழை திருத்தும் பணிகளை, மேற்கொண்டால், எளிதில் தீர்வு காணலாம். இது தொடர்பாக, உயர்நீதிமன்றத்தையும் அணுகியிருக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications