கருணாநிதிக்கு பேனா வடிவ நினைவுச்சின்னம்..மக்கள் வரிப்பணத்தில் அவசியமில்லை..விஜயகாந்த் கண்டனம்
கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து அமைத்து கொள்ளவும்.
சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு பேனா வடிவத்தில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு பதிலாக
திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவுச்சின்னம் அமைக்கலாம் என்றும் கூறியுள்ளார் விஜயகாந்த்.
கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அவர் இதனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டசபையில் அறிவித்தார்.

கருணாநிதிக்கு நினைவுச்சின்னம்
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும். அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும். அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும் என்று கூறினார்.

பேனா வடிவ நினைவு தூண்
இதனைத் தொடர்ந்து கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடத்தை முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்று இருந்தது.

ரூ.81 கோடி செலவில் நினைவுச்சின்னம்
இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு சென்றடையும் வகையில் நினைவிடத்தில் இருந்து 290மீ தூரத்திற்கு கடற்கரை, 360மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. தற்போது மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் எதிர்ப்பு
இந்த நினைவுச்சின்னம் அமைப்பதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் 134 அடி உயரத்தில் ரூ.80 கோடியில் பிரம்மாண்ட பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கக் கூடாது.

யாருக்கு லாபம்
ரூ. 80 கோடியில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைப்பதால் யாருக்கு லாபம்?. நினைவுச்சின்னத்திற்காக செலவு செய்யும் பணத்தை சாலை வசதி, உட்கட்டமைப்பு வசதி, தொழில் வசதிகளை செலவு செய்ய பயன்படுத்தலாம். மக்கள் அதனை வரவேற்பார்கள். கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற நினைவுச்சின்னங்கள் இருக்கும் நிலையில் மெரினாவில் மீண்டும் நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமற்றது.
Recommended Video

திமுக அறக்கட்டளை பணம்
நினைவுச்சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவுச்சின்னம் அமைக்கலாம். மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு அதனை பயன்படுத்த வேண்டும் என்றும் விஜயகாந்ம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications