தமிழகத்தில் எம்எல்ஏக்களுக்கான பென்ஷன் மாதம் 35 ஆயிரமாக உயர்வு.. ஆச்சர்யப்பட வைக்கும் சலுகைகள்
சென்னை: தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதிய தொகை மாதம் ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதற்கான மசோதா நாளை சட்டசபையில் நிறைவேறுகிறது. ஒரு முறை எம்எல்ஏவாக இருந்தால் போதும்.. அவர்களுக்கு மாதம் மாதம் ஓய்வூதியமாக இனி 35000 ரூபாய் கிடைக்கும். எம்எல்ஏவாக இருப்பவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், சலுகைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.. அதேபோல் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதா குறித்தும் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் எம்எல்ஏக்களின் சம்பளம், அரசு ஊழியர்கள் பலரது சம்பளத்தைவிடவும் அதிகம் ஆகும். 2லட்சம் மக்களின் பிரதிநிதியாக வரும் எம்எல்ஏவின் சம்பளம் என்ன.. அவர்களுக்கு தரும் சலுகைகள் என்ன என்பதை பார்த்துவிட்டு அதன்பிறகு புதிய சட்ட மசோதாவை பார்ப்போம்.

2017 ஆம் ஆண்டு, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, எம்எல்ஏக்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அப்போது வெளியிட்ட அறிவிப்பின்படி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மொத்த சம்பளம் மற்றும் இதர படிகள் சேர்த்து ரூ. 1,05,000/- ஆகும். அதாவது இன்னும் தெளிவாக சொல்வது என்றால். மாதந்தோறும் சம்பளம் 30,000, ஈட்டுப்படி 10,000, தொலைபேசி படி7,500, தொகுதிப்படி 25,000, தொகுப்புப்படி 5,000, வாகனப்படி 25,000, அஞ்சல்படி 2,500, ஆக மொத்தம் 1,05,000 ரூபாய் எம்எல்ஏக்களுக்கு மாதம் மாதம் சம்பளமாக வழங்கப்படுகிறது. ஒரு எம்எல்ஏ ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தால், அவருக்கு மொத்தம் 63 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இது ஒருபுறம் எனில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு 3 கோடியாக வழங்கப்படுகிறது. இந்த நிதியை எம்எல்ஏ தொகுதியின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒதுக்கலாம். பள்ளிக்கூடம், நூலகம், கால்வாய், சாலை வசதி, பேருந்து நிலையம், பேருந்து நிழற்குடை என அந்த தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்கள், நகரங்களுக்கும் வேண்டிய வசதிகளை செய்யலாம்.
சட்டமன்ற எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் 30000 ஆக வழங்கப்பட்டு வந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்படும் தொகை ஆண்டுக்கு ரூ. 25,000/- ஆக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான், தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதிய தொகை மாதம் ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதற்கான மசோதா நாளை சட்டசபையில் நிறைவேறுகிறது.
தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் இது பற்றி மசோதாவை நேற்று அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் சட்டசபை அல்லது சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு (முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.சி.க்கள்) மாதமொன்றுக்கு ரூ.30 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது, கடந்த ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் நோக்கத்தில் அதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா அக்டோபர் 17-ந் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications