வெயிலால் ஹெல்மெட் போட மாட்றாங்க.. சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்!
சென்னை: கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரிய வழக்கில் வெயில் காரணமாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் போட மறுக்கிறார்கள் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
தமிழகத்தில் ஹெல்மெட் அணியாமல் இருப்பதாலேயே இருசக்கர வானங்கள் விபத்துக்குள்ளாகும் போது உயிரிழப்புகள் நேரிடுகிறது என்றும் இதனை தடுக்க கட்டாய ஹெல்மெட் சட்டத்தை நடைமுறை படுத்தக்கோரியும் கேகே ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பொதுநல வழக்கு நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசுக்கு கேள்வி
அப்போது, தமிழகத்தில் ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு ஹெல்மெட் அணிவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக கூறியது.

தமிழக அரசு சொன்ன பதில்
மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என்றும் தமிழக அரசு விளக்கமளித்தது. இதனைக் கேட்ட நீதிபதிகள், பைக் ரேஸில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்துள்ளது குறித்து வேதனை தெரிவித்தனர்.

பைக் ரேஸ் - வேதனை
பைக்ரேஸின் போது பைக்கை ஓட்டியவர் கூட ஹெல்மெட் அணியவில்லை என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து பதிலளித்த தமிழக அரசு, பைக் ரேஸை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்மாக தெரிவித்தது.

ஆணையர்கள் ஆஜராக உத்தரவு
இதைத்தொடர்ந்து ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து போக்குவரத்து காவல் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் நாளை மறுநாள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications