சென்னையின் புதிய செல்ஃபி பாய்ண்ட.. நேப்பியர் பாலத்தில் கூடும் மக்கள்.. நெரிசலால் பயணிகள் பாதிப்பு!
சென்னை: செஸ் பலகை வரையப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தில் நின்று செல்ஃபி எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. மூன்று சுற்றுகளுக்கான போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி தொடர்ந்து வெற்றிப்பாதையில் முன்னேறி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த செய்திகள் மக்களிடையே ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.
அதேபோல் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்களிடையே பிரபலப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதற்காக சென்னையின் பல்வேறு இடங்களிலும் செஸ் பலகையின் நிறமான வெள்ளை மற்றும் கறுப்பு வண்ணங்கள் மூலம் ஓவியங்கள் வரையப்பட்டது. அதேபோல் சென்னை ஒலிம்பியாட் போட்டியின் சின்னமான தம்பி குதிரையை நகரின் முக்கிய சுவர்களில் வரைந்துள்ளது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரீல்ஸ் எடுக்க குவிந்த 2கே கிட்ஸ்.. திணறும் போலீஸ்.. நேப்பியர்
சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்கவே செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டன. இவை எல்லாவற்றையும் கடந்து, தமிழக அரசால் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளே பாராட்டும் வகையில் நடத்தப்பட்ட தொடக்க விழா, தமிழ்நாட்டிற்கும் பெயர்பெற்று கொடுத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னையின் முக்கிய போக்குவரத்து பாலமான நேப்பியர் பாலம், செஸ் பலகையை போன்று கறுப்பு - வெள்ளை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டது. இது தமிழ்நாடு அரசு வெளியிட்ட விளம்பரப் பாடலிலும் காட்சியாக வந்ததால், நேப்பியர் பாலத்தை பார்க்க மக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டது.
அதிலும் இரவு நேரத்தில் விதவிதமான மின் விளக்குகளால் ஒளிர்வது சென்னையின் புதிய செல்ஃபி பாய்ண்ட்டாக மாறியுள்ளது.
இதனால் நேப்பியர் பாலத்திற்கு குடும்பம் குடும்பமாக வரும் மக்கள், பாலத்தின் இருபுறமும் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, மொபைல்களில் மூலம் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். இதனால், அப்பகுதியில், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
Recommended Video
இதனால், அப்பகுதி வழியாக பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, அப்பகுதியில் செல்ஃபி எடுப்பவர்களின் வாகனத்தை தனியாக நிறுத்த, போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.