மரணத்தை தடுக்க ஆக்சிஜனை காசு கொடுத்து வாங்கி வீட்டிலேயே பயன்படுத்தும் மக்கள்!
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பதை தடுக்க டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் ஆக்சிஜனை காசு கொடுத்து வாங்கும் நிலை உருவாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கிய புதிதில் பெரிய அளவில் உயிர்களை பலி வாங்கவில்லை. ஆனால் கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்த நிலையில் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 19459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 350 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,48,650 ஆக உயர்ந்துள்ளது மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக கடுமையாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இந்த 6 மாநிலங்களில் மட்டும் சுமார் 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி
கொரோனா வைரஸ் தொற்று மற்ற நோய்களை போல் இயற்கையான உடல் பாதிப்பால் வருவதில்லை. பிறரிடம் இருந்தே பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து மருத்துவ சிகிச்சைக்கு பின் பாதித்தவர் உயிர் பிழைக்கிறார், குணம் அடைகிறார். அல்லது மரணத்தை சந்திக்கிறார்.

மூச்சுத்திணறல்
இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறியாமல் முற்றிய பின் மருத்துவமனைக்கு செல்வதே உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இது ஒருபுறம் எனில் இன்னொரு பக்கம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் முற்றிவிட்டால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதை ஆரம்ப நிலையில் கவனிக்காமல் விட்டால் நுரையீரலை பாதித்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்துகிறது.

ஆக்சிமீட்டர் கருவி
உடலுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு குறைவதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் பெரும்பாலும் இறக்கிறார்கள். இதனால் தங்கள் உடல் நலனை பாதுகாத்துக்கொள்ள, சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் மக்கள், உடலில் ஆக்சிஜன் அளவைக் காட்டும் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகளை வாங்க அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். கொரோனா பற்றிய விழிப்புணர்வு காரணமாக ஏராளமானோர் இதை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

வீட்டிலேயே பயன்படுத்துகிறார்கள்
பல ஆயிரங்களையும், லட்சங்களையும், செலவழித்து வைத்தியம் பார்க்க தயாராக இருந்தாலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனையில் இடத்தை தேடி மக்கள் அல்லாடுகிறார்கள். பெருநகரங்களில் தான் மருத்துவ கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் டெல்லி போன்ற பெருநகரவாசிகள் பலர் ஆக்சிமீட்டருடன், உயிர்காக்கும் ஆக்சிஜன் கருவிகளையும் வாங்கி வீட்டிலேயே பயன்படுத்த தொடங்கி உள்ளார்கள்.

ஆக்சிஜன் சிலிண்டர்
கொரோனாவால் தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு முதலில் ஆக்சிஜனையே சுவாசிக்கச் செய்து மருத்துவர்கள் உயிரை காப்பாற்றுகிறார்கள். இத்தகைய செயற்கை ஆக்சிஜனை, ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் கருவிகள் மூலம் வீட்டிலேயே பெறமுடியும் என்பதால் அவற்றை பலரும் வாங்கி குவித்து வருகிறார்கள்.

எப்படி வாங்குகிறார்கள்
மாஸ்க் உடன் இணைந்த ஆக்சிஜன் சிலிண்டர், பெரிய மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கின்றன. கொரோனாவிற்கு முன்பு 10 லிட்டர் சிலிண்டர் 6,500 ரூபாய்க்கு விற்றது. ஆனால் தற்போது 8 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கிறது. எனினும் தேவை காரணமாக மக்கள் அதிகம் வாங்கி வருகிறார்கள். ஆக்சிஜனை நேரடியாக சுவாசிக்க உதவும் சிலிண்டர்களுக்கு மாற்றான இந்த, ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் கருவி பேட்டரியில் இயங்கக்கூடியது. ஆக்சிஜன் சிலிண்டர்களைப் போல் கான்சன்டிரேட்டர் கருவிகளில், மீண்டும், மீண்டும் ஆக்சிஜனை நிரப்ப தேவையில்லை. பேட்டரி ஆயுள் இருக்கும் வரை தேவையான ஆக்சிஜனை சுவாசித்துக் கொண்டே இருக்க முடியும். இக்கருவி, சுற்றுப்புறத்தில் உள்ள ஆக்சிஜனை இழுத்து, அதை வடிகட்டி, டியூப் வழியாக நமக்கு அனுப்பும். சுவாசிப்பதில் தடை ஏற்படாது. இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் கருவிகளை மக்களே காசு கொடுத்து வாங்கும் நிலை என்பது மிகவும் கவலைக்குரியதாகும். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இதை பயன்படுத்துவது ஆபத்தாக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications