நில அளவை.. வட்டாட்சியர் ஆபிஸ் போக வேணாம்! ஆன்லைனில் வந்த சூப்பர் வசதி.. கன்னியாகுமரிக்கு குட் நியூஸ்
குமரி: உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவிடுவதற்கு சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், குமரி மாவட்டத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்திருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
நிலம் வாங்கும் போது மிகவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று நிலத்தின் அளவீடுகள்.. ஒருவர் வாங்கும் நிலத்தில் அளவு எவ்வளவு உள்ளது என்பதை பார்த்து வாங்க வேண்டும். என்னதான் பார்த்து பார்த்து வாங்கினாலும் கூட சில நேரங்களில் நில அளவுகள் மாறிவிடுகின்றன. பட்டாவில் ஒன்றாகவும் நிலத்தை அளவிடும் போது ஒன்றாகவும் இருந்து விடுகிறது.

நிலத்தின் அளவீடு மாறிவிட்டால் விற்கும் போது பிரச்சினை எழுந்துவிடும். இதனால், நிலத்தை சரியாக அளவீடு செய்து வைத்துக்கொள்வது அவசியம். நிலத்தை அளவீடு செய்வதற்கு வட்டாட்சியர் அலுவலகம் சென்று கட்டணம் செலுத்தி அப்ளை செய்ய வேண்டும். இதன்பிறகு அதிகாரிகள் வந்து நில அளவை மேற்கொள்வார்கள். இப்படி நேரடியாக சென்று விண்ணப்பிக்கும் போது, கால தாமதம், லஞ்சம் என பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.
இத்தகைய பிரச்சினைகளை கையாளும் விதமாக இணையவழி சேவைகளை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவிடுவதற்கு சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த வசதி மாவட்ட வாரியாக அமல்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- "குமரி மாவட்டத்தில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில் தற்போது வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக முதல்-அமைச்சரால் கடந்த 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து இ-சேவை மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனவே நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும். நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது செல்போன் வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவையர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் நிலஅளவையரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications