தனியார் ஆபீஸ்களிலும் 100% ஊழியர்களுக்கு அனுமதி.. சென்னைக்கு கூட்டம் கூட்டமாக திரும்பி வரும் மக்கள்!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 100 சதவீத பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சென்னை நோக்கி பொதுமக்கள் திரும்பி வர ஆரம்பித்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளொன்றுக்கு நோய்த்தொற்று எண்ணிக்கை குறையும் மாவட்டங்களின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து தொற்று வேகமாக குறைந்து வரும் மாவட்டங்களான, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பணியாற்றலாம்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களும் 3வது வகையில் வருகின்றன. இங்கு, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. ஜவுளி, நகை கடைகளுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு அனுமதி உண்டு.

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கூட்டம்
இதனால், சென்னையில் பணிபுரிந்து விட்டு ஊரடங்கு காலத்தில் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் தற்போது சென்னை நோக்கி திரும்பி வருகின்றனர். இதனால் சென்னையின் நுழைவு வாயிலான செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பெரும்பாலான மக்கள் இருசக்கர வாகனங்களிலேயே செல்கின்றனர். இதனால் செங்கல்பட்டு சுங்கச்சாவடி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

திருச்சி நகரம்
அதன்படி, ஊரடங்கிற்கு முன்பு திருச்சி மாநகரில் இயக்கப்பட்டு வந்த 936 பேருந்துகளில் இன்றுமுதல் 80 சதவீத பேருந்துகள் இயங்க துவங்கி உள்ளன. இன்று முதல் 735 பேருந்துகள் இயங்குகின்றன. இதில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கும், திருச்சியில் இருந்து தளா்வுகள் அறிவிக்கப்படாத கரூர், சேலம், நாமக்கல், தஞ்சை, உள்ளிட்ட பகுதிகளுக்கு அம்மாவட்டத்தின் எல்லைவரை சென்றுவிட்டு திரும்பும்படி வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் 6 மணி முதல் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளின் சேவை துவங்கி உள்ளது. பொதுமக்களும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பேருந்து சேவையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். முறையாக அரசு அறிவித்த முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை பொதுமக்கள் கையாண்டு பேருந்தில் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

ராமநாதபுரம் பஸ்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆறு பணிமனைகளில் இருந்து 112 நகரப் பேருந்துகளும் 163 (புறநகர் பேருந்துகளும் )வெளி மாவட்டங்களுக்கு இடையே செல்லக்கூடிய பேருந்துகள் என மொத்தமாக 275 பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருகிறது .பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கோவில்கள் நடை திறப்பு
திருத்தணி சுப்ரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்திபெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு காரணமாக கொரோனோ காலகட்டத்தில் (26-04-2021) திருக்கோயில் மூடப்பட்டது, தமிழக அரசின் உத்தரவின் பெயரில் திருக் கோவிலில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் தடையின்றி நடைபெற்று வந்தது,

திருத்தணி முருகன் கோவில்
தற்போது கொரோனோ வைரசின் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருவதை முன்னிட்டு தமிழக அரசு திருக்கோயில்கள் திறக்க அனுமதி அளித்தது. அதன் பெயரில் இந்து அறநிலைத்துறை வழிகாட்டுதலின் பேரில் திருக்கோயில் முழுவதும் கிருமிநாசினிகள் கொண்டு தூய்மை பணி செய்யப்பட்டு, இன்று திங்கட்கிழமை (28-06-2021) காலை 6 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே கோயில் ஊழியர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து வந்தனர். 63 நாட்கள் கழித்து முருகப்பெருமான் கோவிலில், இன்று பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications