அம்மனுக்கு மீன் படைக்க சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவிந்த அசைவ பிரியர்கள்!
சென்னை : ஆடி மாதம் இரண்டாம் வாரமான இன்று, அம்மனுக்கு படைப்பதற்காக, சென்னை காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர்.
Recommended Video
சென்னை காசிமேடு மீன் விற்பனை கூடத்தில், பொதுவாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்கு கூடுவது வழக்கம். அதேபோன்று இன்றும், காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் ஏராளமான அசைவ பிரியர்கள் மீன்களை வாங்குவதற்காக திரண்டனர். மேலும், ஆடி மாதத்தின் இரண்டாவது வாரம் என்பதால், அம்மனுக்கு மீன்களை படைக்க, மீன் விற்பனை கூடத்தில் மீன்களை வாங்க ஏராளமான அசைவ பிரியர்கள் குவிந்தனர்.

காசிமேடு கடற்கரையிலிருந்து கடலுக்குள் விசைப்படகுகள் மூலமாக மீன்களை பிடித்து நேரடியாக காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்படுவதால், சென்னையில் உள்ள பல மொத்த வியாபாரிகளும் மீன் அசைவ பிரியர்களும் மீன்களை வாங்குவதற்காக வந்துள்ளனர். இதனால் மீன்விற்பனை கூடத்தில், மக்கள் கூட்டம் பொங்கி வழிகிறது.
வஞ்சிரம் மீன் கிலோ 1,200 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், நாயாறல் கிலோ 900 ரூபாய்க்கும், கொடுவா கிலோ 800-ல் இருந்து 1,000 ரூபாய்க்கும், பர்லா கிலோ 350 ரூபாய்க்கும், பாறை கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சங்கரா 400 ரூபாயிலிருந்தும், கடம்மா கிலோ 400 ரூபாயிலிருந்தும், நெத்திலி மீன் கிலோ 400 ரூபாய் ரூபாயிலிருந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இறால் நண்டு போன்றவை 450 முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நள்ளிரவு முதலே அசைவ பிரியர்கள் மீன் விற்பனை கூடத்தில் திரண்டனர். வஞ்சிரம், வவ்வா, கொடுவா, நாயாறல், சீலா, கானாங்கத்தை போன்ற பெரிய மீன்களின் வரத்தும் அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டன. மீன்களின் வரத்தை போலவே விலையும் சற்றே உயர்வுடன் காணப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.
வஞ்சிரம், பாறை, வவ்வால் உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் விலை, கடந்த வாரத்தை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால், காசிமேடு மீன் விற்பனை கூடம் திருவிழா போல் காட்சியளிக்கிறது.












Click it and Unblock the Notifications