தொடர் மின்வெட்டு.. நள்ளிரவை தாண்டியும் மின்சாரம் வராததால் ஈசிஆர் சாலையில் மக்கள் சாலை மறியல்
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் ஒரு சில இடங்களில் இரவு 8 மணிக்கு சென்ற மின்சாரம் நள்ளிரவை கடந்தும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் எழுந்தது.
தமிழகத்தில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த மின்வெட்டை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்தும் வருகிறார்.

இந்த நிலையில் சென்னைக்குள்பட்ட உத்தண்டி, பனையூர், அக்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் மின்தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. அது போல் நேற்று இரவு 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவை கடந்தும் வராததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் புழுக்கத்தில் தூக்கமின்றி தவித்து வந்தனர். மின்சார வாரியத்திற்கு போன் போட்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பதால் பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications