கொரோனா பரவல் அச்சமின்றி மீன்சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!
சென்னை: கொரோனா பரவல் அச்சம் எதுவும் இல்லாமல் இன்று மீன் சந்தைகளில் பெருமளவு மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் கடைபிடிக்காமல் மக்கள் இப்படி பொதுவெளியில் நடமாடுவது பெரும் கவலைக்குரியதாகும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. புதிய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அச்சமின்றி நடமாட்டம்
பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளி அவசியம் என்பது உள்ளிட்டவை தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் இதனை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் மக்கள் இன்னமும் அச்சமின்றி நடமாடுகின்றனர்.

வாகனரம் சந்தை
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை அடுத்த வானகரம் மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடியது. அதிகாலை முதலே மீன்கள் வாங்க காலை முதலே மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஆனால் பலரும் முக கவசம் அணியாமல் வந்திருந்தனர். கொரானோ விதிகளை பின்பற்றாமல் முககவசம் அணியாமல் மீன்வாங்க வந்தவர்களுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ரூ200 அபராதம் விதித்து திருப்பி அனுப்பினர்

காஞ்சி மீன்சந்தை
இதேபோல் காஞ்சிபுரம் மீன்சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. காஞ்சிபுரம் பொன்னேரி கரை மீன் சந்தை பகுதியில் ஏராளமான மீன் வகைகளை வாங்கிச் செல்ல ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடினர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடி வருவதால் சமூக இடைவெளியின்றி காணப்பட்டது.

கட்டுப்பாடுகள் தேவை
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் மீன் வரத்து குறைவாகவும் விலை அதிகமாகவும் இருக்கிறது. ஆனாலும் அசைவப் பிரியர்கள் மீன்களை வாங்க குவிந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் இப்படி ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுவதை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications