சென்னை வெள்ளம்.. டோக்கன் பெற முடியாதவர்களுக்கு நிவாரண தொகை கிடைக்குமா? அமைச்சர் உதயநிதி பளிச் பதில்
சென்னை: மிக்ஜாம புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக அமைச்சர் உதயநிதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது முதலே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. தென்மேற்கு பருவமழை நமக்கு போதிய மழையைத் தராத நிலையில், வடகிழக்கு பருவமழை அதிக மழையைக் கொடுத்தது.

குறிப்பாக இம்மாத தொடக்கத்தில் சென்னையில் இரண்டு நாட்கள் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் கனமழை கொட்டியது.
கொட்டிய மழை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியது.. முதல் நாளன்று கடல் சீற்றம் காரணமாக மழை வெள்ளத்தைக் கடலும் உள்வாங்கவில்லை.. இதனால் அனைத்து பகுதிகளிலும் முதல் நாளில் மழை நீர் தேங்கியது. துளியும் மழை நீர் வடியவில்லை. அதன் பின்னர் முக்கிய சாலைகளில் மறுநாளே மழை நீர் வடிந்தது.
ஆனால், உட்புற பகுதிகளில் மழை நீர் வடிய சில நாட்கள் வரை ஆனது. மிக்ஜாம் புயல் ஆடி சென்ற ருத்ர தாண்டவத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இங்கு வசித்த பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
நிவாரண தொகை: அதாவது வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்துக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வேளச்சேரியில் நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேரடியாகத் தொடங்கி வைத்தார். இந்த ரூ.6000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூலம் இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டோக்கன் வழங்கப்பட்டு, அவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதேநேரம் சிலர் தங்களுக்கு டோக்கன் வரவில்லை என்று கூறியிருந்தனர். இதனால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை என்றால் அவர்களுக்கு நிவாரண தொகை கிடைக்குமா என்று பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி சமீபத்தில் விளக்கம் கொடுத்திருந்தார்.
உதயநிதி பதில்: இது குறித்து கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி, "நிவாரணத் தொகை டோக்கன் பெற முடியாதவர்களுக்கும் ரூ.6,000 வழங்கப்படும். அவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் நிவாரண தொகை வழங்கப்படும். டோக்கன் பெற முடியாதவர்களுக்கு உதவ ஏதுவாக ரேஷன் கடை அருகே உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டோக்கன் பெறாதவர்கள் இந்த உதவி மையங்களில் விண்ணப்பத்தில் ஒரு வாரத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications