சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா.. கையெடுத்து கும்பிட்டு குமுறி அழுத பெண்கள்
சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை விசாரணைக்காக சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்து சென்ற போது சாலையில் கூடியிருந்த மக்கள் அவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டனர். மேலும் அங்கிருந்த பெண்கள் குமுறி அழுதனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் புகார் அளித்தனர்.
ஏழை மாணவிகள், ஹாஸ்டல் மாணவிகளை சொகுசு அறைக்கு வரவழைத்து அவர்களிடம் பாலியல் சீண்டல் செய்து பின்னர் அவர்களின் வாழ்வை நாசமாக்குவதுதான் இந்த பாபா செய்த வேலை என புகார்கள் மூலம் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலம் சென்ற சிவசங்கர் பாபா , அங்கிருந்து டெல்லி தப்பிச் சென்ற போது சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

காவல்
இந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்த அவரை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த சுஷில் ஹரி சர்வதேச பள்ளிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

கையெடுத்து கும்பிட்ட மக்கள்
அப்போது அவர் வருவது தெரிந்து சாலைகளில் அப்பகுதி மக்கள் கூடினர். அவரை பொதுமக்கள் தாக்கிவிடக் கூடாது என போலீஸார் பாதுகாப்பை அதிகரித்தனர். ஆனால் மாறாக அவரை பார்த்த மக்கள் கையெடுத்து கும்பிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்
இந்த சம்பவத்தை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கொந்தளித்துள்ளனர். சிறு குழந்தை என்று கூட பார்க்காமல் 6 ஆம் வகுப்பு, 7ஆம் வகுப்பு மாணவிகளிடம் கூட அத்துமீறிய இந்த சிவசங்கர் பாபாவுக்கு இத்தனை வரவேற்பா என இணையத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.












Click it and Unblock the Notifications