அமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்... படிப்பதற்கு ஆர்வம் காட்டும் இளம் தலைமுறையினர்..!
சென்னை: அமேசான் கிண்டிலில் பெரியார் குறித்த மற்றும் அவர் எழுதிய 250-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன.
திராவிடர் விடுதலை கழகம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த புதிய முயற்சிக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பெரியாரின் எழுத்துக்களை இ-புத்தகம் வடிவில் படித்து அவருடைய சிந்தனைகளை, கொள்கைகளை புதிய தலைமுறையினர் ஆர்வமுடன் அறிந்துகொள்கின்றனர்.
தனது ஆபிசில் 'லாபம்' என எழுதியதை தவிர.. தொகுதி மக்களுக்கு வானதி என்ன செய்தார்?. கமல் கடும் தாக்கு!
தன்மானப் பேரொளி
தன்மானப் பேரொளியாக திகழ்ந்த பெரியார், சமூக சீர்த்திருத்த இயக்கத்தின் தந்தையாக போற்றப்படுகிறார். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை தன் வாழ்நாளின் இறுதிநாள் வரை மேற்கொண்டார். அவரது போதனைகளும், எழுத்துக்களும் சிந்தனையை தூண்டும் விதத்தில் அமைவதோடு படிப்பவர்களுக்கு ஒருவித தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
பெரியார் நூல்கள்
அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் ஏன், இயற்கையும் மாறுதலும், அழியட்டும் ஆண்மை, இனி வரும் உலகம், உயர் எண்ணங்கள், கடவுள் மறுப்பு தத்துவம் ஒரு விளக்கம், கிராம வாழ்க்கை புரட்டு, சுயநலம் பிறநலம், திராவிடர் திருமணம் என்பன உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற தலைப்புகளில் பெரியார் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் இ-புத்தகங்களாக இப்போது கிடைக்கின்றன.
இளம் தலைமுறையினர்
திராவிடர் விடுதலை கழகம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய விடுதலை ராசேந்திரன், ''இளம் தலைமுறையினருக்கு பெரியாரின் எழுத்துக்களை கொண்டு சேர்க்கும் விதமாக அவர் எழுதிய மற்றும் அவர் தொடர்புடைய 250-க்கும் மேற்பட்ட நூல்களை அமேசான் கிண்டில் தளத்தில் விற்பனை செய்கிறோம். பெரியாரின் நூல்களை இளம் தலைமுறையினர் அதிகம் வாசிக்கிறார்கள் என்ற தகவலும், அதிக விற்பனையாகிறது என்ற செய்தியும் மகிழ்ச்சியை தருகிறது'' என்கிறார்.
லாப நோக்கமில்லை
பெரியார் குறித்தும் அவரது சமூக சீர்த்திருத்தப் பணிகள் குறித்தும் இந்தக் கால தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக கூறுகிறார் திராவிடர் விடுதலை கழக இணையதளப் பிரிவு நிர்வாகி விஜயகுமார். மேலும், அனைத்து புத்தகங்களும் லாப நோக்கமோன்றி ரூ.49-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும், அதிகபட்சம் ரூ.99-க்கு மேல் எந்த புத்தகமும் விற்பனை செய்யவில்லை எனவும் தெரிவிக்கிறார்.
நம்பிக்கை
மேலும், இதுவரை அமேசான் கிண்டில் மூலம் 2500-க்கும் மேற்பட்டோர் பெரியாரின் நூல்களை ஆர்வமுடன் படித்துள்ளதாக கூறுகிறார். இனி வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ள இவர், புதிய ஃபார்மட்டில் டிஜிட்டலில் படிப்பவர்களுக்கு வசதியாக எழுத்துக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.