சீமான் வீடு முற்றுகை- பாதுகாப்புக்காக உருட்டுக்கட்டைகளுடன் நின்ற நாதக ஆண்,பெண் நிர்வாகிகள்!
சென்னை: தந்தை பெரியாரை இழிவுபடுத்தியதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு முற்றுகையிடப்படும் என 30க்கும் மேற்பட்ட பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்புகள் அறிவித்து போராட்டம் நடத்தின.. இந்த நிலையில் சீமான் வீட்டுக்கு பாதுகாப்பாக நேற்று இரவு முதலே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் கைகளில் உருட்டுக் கட்டைகளுடன் சீமான் வீடு முன்பாக குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
தந்தை பெரியாரை இழிவு செய்ததற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு இன்று முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திக, திவிக, மே 17 இயக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. இதனையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இன்னொரு பக்கம் சீமானின் விமர்சனம் நியாயமானது; பெரியார் ஒழுக்கமற்றவர் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன் சீமான் வீட்டை முற்றுகையிடுவோர் தமிழரல்லாதாவர்கள்; சீமானை முன்வைத்து தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க சதித் திட்டம் தீட்டுவதாகவும் கூறியிருந்தனர்.

மேலும் சீமான் வீட்டை முற்றுகையிட்டால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்று நாம் தமிழர் கட்சியினரும் சமூக வலைதளங்களில் எச்சரித்திருந்தனர். இந்த நிலையில் சீமான் வீடு முன்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நேற்று இரவு முதலே குவிந்தனர். சீமான் வீட்டை முற்றுகையிடுவதைத் தடுக்கும் வகையில் அணிவகுத்தும் நின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஆண், பெண் நிர்வாகிகள் சிலர் கைகளில் உருட்டுக் கட்டைகளுடன் நின்றனர். அப்போது, எங்களைத் தாக்க முயன்றால் நாங்கள் பதில் தாக்குதல் நடத்துவோம்; அதற்காகவே உருட்டுக்கட்டைகளுடன் நிற்கிறோம் எனவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications