பெரியாரை காலணியால் அடிக்க சொன்ன 'நாம் தமிழர்’ சாட்டை துரைமுருகன் மீது போலீசில் புகார்- ஜாமீன் ரத்தா?
சென்னை: தந்தை பெரியாரை காலணியால் அடிக்க வேண்டும் என பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை கைது செய்ய வலியுறுத்தி வேலூர் போலீசில் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொது மேடைகளில் பெரியார் ஒரு வழிகாட்டி; தமிழருக்கு தலைவர்; அவரும் சமூக விடுதலைக்குப் போராடியவர் என பேசுவார். சில ஆண்டுகளில் பெரியாருக்கு வணக்க நிகழ்வுகளை நாம் தமிழர் கட்சி நடத்தும்.

அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன், பொது மேடைகளிலும் தாம் நடத்தும் யூ டியூப் சேனல்களிலும் தந்தை பெரியாரை மிக கடுமையாக இழிவாக பேசுவார் என்பது குற்றச்சாட்டு. திருக்குறள் குறித்த தந்தை பெரியாரின் விமர்சனத்தை சாட்டை துரைமுருகன் அண்மையில் ஒரு வீடியோ வெளியிட்டதாகவும் அதில் தந்தை பெரியாரை காலணியால் அடிக்க வேண்டும் என பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து சாட்டை துரைமுருகனுக்கு பெரியாரிஸ்டுகள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பான விவாதங்களும் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் வேலூரில், சாட்டை துரைமுருகனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போலீசில் புகார் மனு கொடுத்துள்ளனர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் சாட்டை துரைமுருகனுக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்கப்படும் எனவும் திராவிடர் விடுதலை கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தை இழிவாக பேசிய வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்; அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்திருந்தது. பின்னர் நீதிமன்றத்தில் பெரும் போராட்டம் நடத்தி ஜாமீனில் விடுதலையானார். தற்போது ஜாமீனில் வெளியே உள்ள நிலையில் பெரியார் உள்ளிட்ட தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவதால் அவரது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் எனவும் பெரியாரிஸ்டுகள் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications