துணைப் பிரதமராக சந்திரபாபு நாயுடு? தூதுவிட்டது ஏன்? பீட்டர் அல்போன்ஸ் விளக்கம்!
சென்னை: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், ஆந்திர முதல்வராகப் பதவியேற்ற உள்ள சந்திரபாபு நாயுடு துணைப் பிரதமராக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பீட்டர் அல்போன்ஸ். அவர் தனது எக்ஸ் தளத்தில் ஆந்திர முதல்வராகப் பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவிடம் சிலகோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய அரசியலில் ஒரு மகத்தான மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பினை காலம் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கியுள்ளது. இந்திய அரசியலில் நிறைந்த அனுபவம் பெற்ற அவர் தன்னிடம் இருக்கும் துருப்புச் சீட்டுகளை சரியாகவே பயன்படுத்துவார் என்று நம்புகிறோம்.
காலை தொலைக்காட்சிகளில் அவர் மோடிக்கு ஆதரவளிக்க இருப்பதாகச் செய்தி வருகிறது.அது உண்மையானால் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு வேண்டுகோள்.
ஆந்திராவின் முதலமைச்சராக அவரது மகன் நரேஷ் அவர்களை அமர்த்திவிட்டு சந்திரபாபு நாயுடு துணைப் பிரதமராக உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கவேண்டும்.
தென் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்து தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். பிரதமர் வட இந்தியராக இருக்கும்போது தென்னிந்தியாவின் ஒரு முக்கிய தலைவர் துணைப் பிரதமராக இருப்பது தென்னிந்திய மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் உள்ள நாயுடுவிடம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது ஒரு முக்கிய நகர்வாகத் தெரிகிறது.
இந்தக் கோரிக்கையை அவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டேக் செய்துள்ளார். அதன்பின்னர் தான் ஸ்டாலின், நேற்று நாயுடுவைச் சந்தித்துள்ளார்.
இந்தக் கோரிக்கை பற்றியும் , ராமர் கோயிலை மையமாக வைத்து அரசியல் செய்து வந்த அயோத்தியிலேயே பாஜக தோல்வியைத் தழுவி இருப்பது பற்றியும் அவர் ஒரு பேட்டியை அளித்துள்ளார்.
அதில் பீட்டர் அல்போன்ஸ், "கடந்த 10 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்தவர் மோடி. அதை அடுத்து அவர் தேர்தலைச் சந்திக்கிறார். அவர் என்ன செய்ய வேண்டும்? 10 ஆண்டுகால தனது ஆட்சியில் இந்தச் சாதனைகளை எல்லாம் செய்திருக்கிறோம். அதற்காக நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

ஆனால், அவர் அயோத்தியில் கோயில் கட்டியதனை சாதனையாகச் சொல்கிறார். அது சாதனையா? இல்லையா? என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால், மோடி சாதனை எனச் சொன்னதை அயோத்தி தொகுதி மக்களே ஏற்கவில்லை.
ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி வாக்காளர்கள் பாஜகவை நிராகரித்திருக்கிறார்கள். இதைவிட மோடிக்கு ஒரு செய்தியை வலிமையாகச் சொல்ல முடியாது. அயோத்தி மக்கள் மோடிக்கு நல்ல ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளார்கள். அதற்காக நாடு அந்தத் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தேர்தல் பரப்புரையில் மோடி என்னவெல்லாம் பேசினார்? நான் ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது பாருங்கள் என்றார். லல்லு பிரசாத் சிறைக்குப் போவார். தேஜஸ்வி யாதவ் சிறைக்குப் போவார் என்றார். நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டியவர் ஏதோ ஆப்பிரிக்க நாட்டுச் சர்வாதிகாரியைப் போலப் பேசினார்.
இன்று என்ன நடந்திருக்கிறது. மோடி நினைப்பதை எல்லாம் செய்துவிட முடியாது. அமித்ஷா தனது விருப்பம் போல் செயல்பட முடியாது. அந்த முடிவை மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.
இந்திய அரசியலைக் கடந்த 45 ஆண்டுகளாக நான் கவனித்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தென் மாநில உரிமை மிகக் கடுமையாகப் பறிபோய் உள்ளது. மத்திய அரசுக்கும் தென் மாநிலங்களுக்கும் வரி வரி வசூலிப்பதைத் தவிர வேறு எந்தத் தொடர்புமே இல்லை. அந்தளவுக்குத் தென் மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, சந்திரபாபு நாயுடுவுக்குக் காலம் ஒரு சந்தர்ப்பம் வழங்கி உள்ளது. கடந்த காலங்களில் அவர் மோடியால் பாதிக்கப்பட்டவர். அவரால் ஏற்பட்ட அவமானங்கள் கொஞ்சம் அல்ல. அதை நாயுடு உணர்ந்திருக்கிறார். எனவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவின் துணைப் பிரதமராகப் பதவியேற்க வேண்டும் உள்துறை அமைச்சகத்தில் நம்பர் 2 ஆக அவர் அமர வேண்டும்.

அப்படி அவர் அமர்ந்தால், தென் இந்தியாவுக்கு மத்திய அரசில் ஒரு பங்கு கிடைக்கும். பிணைப்பு உருவாகும். தென் மாநிலங்களில் உள்ள ஒரு முதல்வர் கூட பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல. ஆகவே, நாயுடு துணைப் பிரதமராக அமரும்போது இந்த மாநில முதல்வர்கள் அவருடன் ஒரு சுமுகமான உறவை மேற்கொள்ள முடியும். அதனால் தென் இந்தியா வளர்ச்சி பெறும்.
இந்தி பேசாத மாநிலங்களின் உரிமையை அவர் பாதுகாப்பார். நிதியை உரிய அளவில் சமமாகப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்வார். மோடியை நேருக்கு நேராக நின்று கேள்வி கேட்கும் அளவுக்கு அரசியல் அனுபவம் கொண்டவர். சூட்சமங்களை அறிந்தவர். ஆகவே, அவர் துணைப் பிரதமராக வர வேண்டும் என்பது என் விருப்பம்.
சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் எதைக் கேட்டாலும் கொடுக்கக் கூடிய நிலைமையில்தான் பாஜக உள்ளது. மோடியின் நிலைமையும் அப்படித்தான் உள்ளது" என்கிறார்












Click it and Unblock the Notifications