எடப்பாடி டீம் குஷியாக இருந்த நேரத்தில்.. புகழேந்தி போட்ட மனு.. அதிமுக விவகாரத்தில் மீண்டும் சிக்கல்!
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வா.புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி என்னை பார்த்து பயப்படுகிறார், நீதிமன்றத்தை ஏமாற்றி தடை ஆணை பெற்றுவிட்டார் என அதிமுக சின்னம் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்த புகழேந்தி பேட்டி அளித்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று சூர்யமூர்த்தி என்பவர், தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மனுதாரர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகிய அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த வாரம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எடப்பாடி பழனிசாமி அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்தார். அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினர் கிடையாது. உறுப்பினர் இல்லாத ஒருவர், கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக வழக்கை தொடர எந்தவித முகாந்திரம் இல்லை.
கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சியின் உள் விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க முடியாது. கட்சி உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பாக இந்த மனுதாரர் கோரியுள்ள நிவாரணங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவையும் கிடையாது என்பதை ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். சூர்யமூர்த்தியின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்" என்று கோரினார்.
இதையடுத்து, இந்த வழக்கில் நேற்று, அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு வரும் 27 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி பெங்களூர் வா.புகழேந்தி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வா.புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
புகழேந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "எடப்பாடி தரப்பு, டெல்லியில் இருந்து வழக்கறிஞர்களை எல்லாம் வரவழைத்து பொய்யைச் சொல்லி நீதிமன்றத்தை ஏமாற்றி, தடை ஆணை வாங்கி இருக்கிறார். இந்த உத்தரவு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ஏன் எடப்பாடி பழனிசாமி என்னைப் பார்த்து இப்படி பயப்படுகிறார்? பதவி போய்விடும் என்ற பயத்தில் அவசர அவசரமாக கோர்ட்டை மிஸ்லீட் செய்து தடை ஆணை பெற்றுள்ளார். நாங்கள் மனு தாக்கல் செய்திருக்கிறோம். வழக்கு விசாரணையில் உண்மை என்ன என்று தெரியவரும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications