"இரட்டை இலை".. வெறும் விளம்பரம்.. சின்னத்தை முடக்க கோரிய ஜோசப்புக்கு அபராதம் போட்ட நீதிபதிகள்
இரட்டை இலை சின்னத்தை முடக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரிய வழக்கு இன்று நடக்கிறது
சென்னை: இரட்டை இலை சின்னத்தை முடக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் என்பவர் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டது.. விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கண்டிப்பு தெரிவித்ததுடன், ஜோசப்புக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார்திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு சென்னை ஹைகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட் மற்றும் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஜோசப்
அந்தவகையில், அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே. கட்சியின் நிறுவனருமான பி. ஏ. ஜோசப் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

ஆதரவு
ஜூலை 11ம் தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். கட்சியில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையிலான பிரச்னை சாதி ரீதியிலான பிரச்சனையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி இருக்கிறது.

இரட்டை இலை
அதனால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28 ஆம் தேதி மனு அனுப்பியும், எந்த பதிலும் இல்லை. எனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.. இந்த மனுவானது, உயர்நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது..

சீர்குலைப்பு
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையிலான பிரச்னை சாதி ரீதியிலான பிரச்சனையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி இருக்கிறது என்று மனுவில் ஜோசப் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு எகிறியபடியே இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரன்நாத் பண்டாரி அமர்வில் விசாரணை வந்தது.

கண்டிப்பு
அப்போது நீதிபதிகள், "தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்த ஒரு வாரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.. அதிமுக கட்சி நடவடிக்கைகளால் மனுதாரர் பாதிக்கப்பட போவதில்லை.. பொதுநல வழக்கு என்ற பெயரில் விளம்பர நோக்குத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளார்.. எனவே, மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது" என்று கண்டிப்பு தெரிவித்ததுடன், ஜோசப் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்..












Click it and Unblock the Notifications