ஓ.பன்னீர் செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய அப்பாவுவிடம் புகார்
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சபாநாயகர் அப்பாவுவிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஓபிஎஸ் வெற்றி பெற்றார். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் வரை ஓபிஎஸ் சென்றார்.
இதனால் அவர் அதிமுக பொருளாளர் என்ற பதவி பறிக்கப்பட்டு அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்தார். அதிமுகவில் மீண்டும் இணைய ஓபிஎஸ் எத்தனையோ முயற்சிகளை எடுத்தும் அது நடக்கவில்லை.
இதனால் அதிமுக உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை ஓபிஎஸ் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
சுயேச்சை வேட்பாளராக இருந்தாலும் நல்லதொரு வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அதிமுக எம்எஎல்ஏ என கூறிக் கொண்டு அதிமுக வேட்பாளரை எதிர்த்ததால் ஓபிஎஸ்ஸை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என மிலானி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 10ஆவது அட்டவணை பிரிவு 2/1 ன் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிலானியின் மனு தொடர்பாக சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து சபாநாயகர் அப்பாவு நடவடிட்கை எடுப்பார் என சட்டசபை செயலகம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த மனு தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications