மீண்டும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனு போட்ட போலீசார்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பு!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பொன்னை பாலு, அருள், திருமலை ஆகியோரை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக சம்பவம் நடந்த 4 மணி நேரத்திற்குள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் மேலும் 3 பேர் கைதாகினர்.

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்க அவரது தம்பி பொன்னை பாலு, ரவுடிகள் திருவேங்கடம், திருமலை உள்ளிட்டோர் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகவும், இதற்கு வழக்கறிஞர் அருள் மூளையாக இருந்தார் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 11 பேருக்கும் 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசாரின் கஸ்டடியில் இருந்த ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 11 பேரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த மலர்கொடி, தமாகாவைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் திமுக நிர்வாகியின் மகனான சதீஷ்குமார் என மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பாஜக நிர்வாகியான பெண் ரவுடி புளியந்தோப்பு அஞ்சலையை போலீசார் தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவியும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலை ஓட்டேரியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து அஞ்சலை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்துக்கு பயன்படுத்திய 6 செல்போன்களை, வழக்கறிஞர் அருள், தான் கைதாவதற்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை சேர்ந்த ஹரிதரன் என்பவரிடம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஹரிதரனை போலீசார் திருவள்ளூரில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அனைத்து செல்போன்களையும் சேதப்படுத்தி, திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் ஹரிதரன் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினர், ஸ்கூபா டைவிங் நிபுணர்கள் உதவியுடன், கொசஸ்தலை ஆற்றில் இறங்கி செல்போன்கள் வீசப்பட்ட இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, 4 செல்போன்களின் பல்வேறு பாகங்களை தீயணைப்புத் துறையினர் கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் “மாஸ்டர் மைண்ட்”.. வெளிநாட்டில் இருந்தே சம்போ செந்தில் போட்ட 'ஸ்கெட்ச்’?!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலைக்கு பின்னணியில் ரவுடி சம்போ செந்தில் இருக்கலாம் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, அருள், திருமலை ஆகியோரை மீண்டும் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 பேரை காவலில் எடுக்க அனுமதி கோரும் மனு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரவுடிகளுக்கும், கூலிப்படைக்கும் தரகராக செயல்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனையும் காவலில் எடுக்க தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொன்னை பாலு உள்ளிட்ட நபர்களை காவலில் எடுத்து விசாரித்த நிலையில், மீண்டும் காவலில் எடுக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications