ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.. வன்முறையை தமிழ்நாடு அரசு ஏற்காது என்கிறார் உதயநிதி
சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்த அமைச்சர் உதயநிதி, எந்த ஒரு வன்முறையையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாது என்று கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மேலும் இரண்டு பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.

கருக்கா வினோத் மீது ஏற்கனவே பலமுறை பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர் என பதிவிடப்பட்டுள்ளது.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது. அதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மூலம் ஆளுநருக்கு தொடர் அச்சுறுத்தல் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்திற்கு ஆளுநர் சென்ற போது கான்வாய் தாக்கப்பட்ட சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் ஆளுநர் மாளிகை அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை சார்பில் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், எந்த ஒரு வன்முறையையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications