சென்னை வளசரவாக்கம் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. இளைஞர் கைது
மூடியிருந்த டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை சென்னை வளசரவாக்கம் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.
சென்னை: மதுபானம் கேட்ட போது கடையை மூடிவிட்டு போன ஆத்திரத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார் இளைஞர் ஒருவர். விசாரணை நடத்திய காவல்துறையினர் இளைஞரை கைது செய்துள்ளனர்.
குடிக்க மது கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரின் பெயர் கதிரவன் என்பதாகும். இவர் சின்ன போரூரை சேர்ந்தவர்.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மதுபானம் வாங்க நேற்றிரவு சென்றுள்ளார். பணி நேரம் முடிந்து விட்டதால் டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ராஜேந்திரன் என்பவர் நேற்று இரவு கடையை மூடி விட்டு மதுபானம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், வாகனத்தை எடுத்துச் சென்று பெட்ரோல் குண்டு எடுத்து வந்து, மூடி இருந்த டாஸ்மாக் கடையின் மீது வீசியதாக தெரிகிறது.
இதனையடுத்து கதிரவனை மடக்கி பிடித்த டாஸ்மாக் ஊழியர்கள் வளசரவாக்கம் போலீஸிடம் ஒப்படைத்தனர். வளசரவாக்கம் போலீசார் கதிரவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்குடி பள்ளத்தூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் இரண்டு முறை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த தாக்குதலினால் கடையின் விற்பனையாளர் அர்ஜுனன் படுகாயம் அடைந்துள்ளார். பாதிக்கப்பட்ட அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தீயில் எரிந்து டாஸ்மாக் கடையில் இருந்த பணம் மற்றும் மதுபானங்கள் சேதம் அடைந்துள்ளது. அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்ததால் வாலிபர் இந்த செயலை செய்துள்ளார் என்று காவல்துறையின் விசாரணை மூலம் தெரியவந்தது. அதனை ஊடக செய்திகளில் பார்த்த நபரும் சென்னையில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.












Click it and Unblock the Notifications