17 இடங்களில் தாக்குதல்.. கவலையாக உள்ளது! தமிழக அரசு பாதுகாப்பு தர வேண்டும் - வலியுறுத்தும் சசிகலா
சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சட்டவிரோத செயல்களில் யார் ஈடுபட்டாலும் உடனே நடவடிக்கை எடுத்து, தமிழ்நாடு மக்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மாலை கோவை பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவும் கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக - கேரள பொருப்பாளர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை அதிகரித்தது.

பெட்ரோல் குண்டு
இந்த நிலையில் சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் நள்ளிரவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாம்பரம் பகுதி சங்சாலக் மாவட்ட தலைவரான சீதாராமன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் எரிப்பு
இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் சிவசங்கர் என்பவரது காரும் எரிக்கப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியிலும் பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் செந்தில்பால்ராஜின் கார் செட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர்.

டிஜிபி எச்சரிக்கை
இதேபோல் நேற்று மதுரையிலும், கன்னியாகுமரியிலும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைவர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் தமிழ்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்தார்.

சசிகலா ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சசிகலா, "தமிழகத்தில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு வீசி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது வண்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த இரு தினங்களாக 17 இடங்களில் இதுபோன்ற தாக்குதல்களை செய்திருப்பதாக வரும் செய்திகள் கவலை அளிக்கிறது.

நடவடிக்கை தேவை
தமிழக அரசு இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்காமல், பொது மக்களை அச்சுறுத்தும் விதத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து, தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications