தேர்தல் ஓவர்.. 17 நாட்களுக்கு பிறகு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு - அப்படிப்போடு!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்த நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய திமுக, வரும் மே.7ம் தேதி, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைக்கிறது.
159 இடங்களில் திமுக கூட்டணியும், 75 இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றிப் பெற்றுள்ளன. தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்க, வலிமையான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவை செல்கிறது அதிமுக.

விலை உயர்வு
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை 17 நாட்களுக்கு பிறகு இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா ஊரடங்கு ஒருபக்கம், சட்டமன்ற தேர்தல் ஒருபக்கம் என்ற சூழலில், மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

நான்கு முறை
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பிருந்து, விலை ஏற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மாறாக தேர்தல் நடைபெற்ற காலமான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 4 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

இன்றைய விலை
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்தல் தற்போது முடிந்துவிட்ட நிலையில், இன்று பெட்ரோல் விலை 12 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.55 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 85.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

அடுத்தடுத்து விலை ஏற்றம்?
தேர்தல் முடியும் வரை கப்சிப் மோடில் இருந்த பெட்ரோல், டீசல் விலை நிலவரம், இப்போது மீண்டும் 17 நாட்கள் கழித்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனை நாட்கள் விலை ஏற்றப்படாததன் சுமையை, அடுத்தடுத்து விலை ஏற்றி சரி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications