PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு ப்ளாக் ஆயிடும்.. ‘இதை’ செய்யலைனா காலி!
சென்னை: நாடு முழுவதும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்த்து வைத்திருப்பது அவசியம் என மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அடிப்படையிலான KYC சரிபார்ப்பு முறையின் கீழ், ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் விரல் ரேகை பதிவு செய்து உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.
ஆனால் இந்த பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சுமார் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், பெயர் நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக அந்தியோதயா ரேஷன் கார்டு மற்றும் முன்னுரிமை ரேசன் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் உடனடியாக தாங்கள் உணவுப் பொருட்கள் வாங்கும் ரேசன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் அடையாள சரிபார்ப்பை நிறைவு செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

ரேஷன் கார்டு
தமிழகத்தை பொறுத்தவரை, ரேஷன் கார்டு என்பது உணவுப் பொருட்களை பெறுவதற்கான ஆவணம் மட்டுமல்ல; தமிழ்நாடு அரசின் பெரும்பாலான நலத்திட்டங்கள் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டுகளை அடிப்படையாகக் கொண்டு தான் வழங்கப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, பொங்கல் பரிசுத் தொகை, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகளும் ரேஷன் கார்டுகள் மூலமாகவே மக்களிடம் சென்றடைகின்றன.
ரேஷன் கார்டு KYC சரிபார்ப்பு
இதன் காரணமாக, ரேஷன் கார்டுகளில் உள்ள தகவல்கள் சரியாக இருப்பது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 24 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதே நேரத்தில், புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஜூலை 2025 வரை, தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
முன்னுரிமை ரேஷன் கார்டு
முன்பு கூட்டுக் குடும்பமாக இருந்த பலரும், தற்போது மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காக தனித்தனியாக ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்து வருவதால், அரசுக்கு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் 98.45 லட்சம் முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் சுமார் 3 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதேபோல், 18.64 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் சுமார் 62.88 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
அரசு நலத்திட்ட உதவிகள்
இந்த இரண்டு வகை ரேஷன் கார்டுதாரர்களுக்கான அரிசி உள்ளிட்ட தானியங்களின் ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட அளவிலான கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தேசிய ஒதுக்கீட்டின் கீழ் மத்திய அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாகவே பெரும்பாலான மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் சுமார் 20 கோடியே 54 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ரேஷன் அடையாளம் சரிபார்ப்பு
இதன் மூலம் சுமார் 80 கோடி பேர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர். இந்த அளவுக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் நிலையில், போலி பெயர்கள், தகுதி இல்லாதவர்கள், இறந்தவர்களின் பெயர்கள் தொடர்ந்து இருப்பது போன்ற குறைகளை களைவதற்காக, மத்திய அரசு ஆதார் அடிப்படையிலான KYC சரிபார்ப்பு முறையை கட்டாயமாக்கியுள்ளது.
பாயிண்ட் ஆப் சேல்
இதன் ஒரு பகுதியாக, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், ரேஷன் கடைகளில் உள்ள 'பாயிண்ட் ஆப் சேல்' எனப்படும் விற்பனை முனைய கருவியில் விரல் ரேகையை பதிவு செய்து, தங்களது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. நாடு முழுவதும் சுமார் 36 லட்சம் பேர் இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர் என்பதே தற்போது வெளியாகியுள்ள தகவல் ஆகும்.
மத்திய அரசு
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்த பணியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என மத்திய அரசு இதுவரை எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை என்றாலும், அனைவரும் அடையாள சரிபார்ப்பை முடிப்பது அவசியம் என்றும் அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications