கவனம் ஈர்த்த நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் வாசகம்.. அட இது திருக்குறளாச்சே! அர்த்தம் இதுதான்
சென்னை: நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். ‛தமிழக வெற்றி கழகம்’ என அவர் தனது கட்சிக்கு பெயரிட்டுள்ள நிலையில் கட்சியின் வாசகமாக திருக்குறள் வரி இடம்பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அவர் தனியாக அரசியல் கட்சியை தொடங்க உள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சி பெயரை பதிவு செய்யும் பணியில் நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
இதன் தொடர்ச்சியாக இன்று நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். ‛தமிழக வெற்றி கழகம்’ (Tamilaga Vettri Kazhagam) என்ற பெயரில் அவர் தனது கட்சிக்கு வைத்துள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். டிவிகே விஜய் (TVK Vijay) என வலைதளங்களில் அவர் தனது கட்சிக்கு என்று தனியாக கணக்கு தொடங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி உள்ள விஜய் அதன் தலைவராக உள்ளார். மேலும் இந்த கட்சியின் லெட்டர் பேட் மற்றும் வலைதள பக்கங்களில் ‛‛பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த வரி என்பது திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது திருக்குறளில் பொருட்பால் பிரிவில் குடியியல் எனும் அதிகாரத்தில் ‛பெருமை' எனும் தலைப்பின் கீழ் 972வது குறளில் இருந்து இந்த வரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி இடம்பெற்றுள்ள முழு திருக்குறள் என்பது..
‛‛பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’’ என்று வரும். இந்த திருக்குறளின் முதல் 3 வார்த்தைகளை நடிகர் விஜய் தேர்வு செய்து தனது கட்சியில் பயன்படுத்தி உள்ளார்.
இதன் அர்த்தம் என்பது அனைவருக்கும் பிறப்பு என்பது சமமானது தான். இதில் தொழில் வேறுபாட்டால் பெருமை, சிறுமை, பாகுபாடு என்பது இல்லை என்பதாகும். இதன்மூலம் நடிகர் விஜய் ‛பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பதை தனது அரசியல் கொள்கையாக மக்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications