பீட்சா, பர்கர், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கோவை கூடைப்பந்து வீராங்கனை பலி! சென்னையில் நடந்தது என்ன?
சென்னை: மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் கூடைப்பந்து போட்டி விளையாடுவதற்காக சென்றுவிட்டு சென்னை திரும்பிய கோவை வீராங்கனை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தனியார் பள்ளியை சேர்ந்தவர் எலினா லாரேட். 15 வயதான இவர் கூடைப்பந்து விளையாடுவதில் வல்லவர். இவர் நிறைய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றிருந்தார்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கூடைப்பந்து போட்டி நடந்தது. இதில் கலந்து கொள்ள சென்னை வந்த அவர், அங்கிருந்து ரயில் மூலம் குவாலியர் சென்றார். அங்கு போட்டியில் பங்கேற்றுவிட்டு ரயில் மூலம் கடந்த 15 ஆம் தேதி சென்னை திரும்பினார்.
ரயிலில் வந்த மாணவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற எலினா, அங்கு உறவினர்களிடம் தனது உடல்நிலை பிரச்சினை குறித்து கூறியுள்ளார்.
இதையடுத்து எலினாவை பெரியமேடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஏற்றி சென்றனர். ஆனால் எலினா செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீஸார் , பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அவரது உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ரயிலில் சென்னை வரும் போது அவர் பர்கர், சிக்கன் ரைஸ், பீட்சா உள்ளிட்டவைகளை ஆன்லைனில் ஆர்டர் போட்டு அவரும் அவருடன் வந்தவர்களும் சாப்பிட்டதாக தெரிகிறது.
தற்போது ஸ்விக்கி, ஜொமாட்டோ மூலம் ரயில் செல்லும் போது ஆர்டர் போட்டால் அந்த உணவானது அருகே உள்ள ரயில் நிலையத்தின் நடைமேடைக்கு வந்து டெலிவரி செய்யப்படும். அந்த வகையில்தான் இவர்களும் ஆர்டர் செய்தனர். இதை சாப்பிட்டதும் எலினாவுக்கு வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் எலினா அவதியடைந்த நிலையில் கோவைக்கு செல்லாமல் சென்னையில் உள்ள உறவினர்களிடம் சொல்லி மருத்துவமனைக்கு சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டார். எனவே அவருடைய உடல் உபாதைக்கு அவர் ஆர்டர் செய்த உணவுதான் காரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் உறுதியான காரணங்கள் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே தெரியும் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications