"விளையாட்டு நகரம்" செங்கல்பட்டில் இடமில்லை.. திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்.. மெய்யநாதன் தகவல்!
சென்னை: திருச்சியில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழக விளையாட்டு வீரர்களுக்கான உதவி, செஸ் ஒலிம்பியாட், விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை என்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே சர்வதேச தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னைக்கு அருகில் பிரமாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி வாகை சூட ஏதுவாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டது.

விளையாட்டு நகரம்
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகளை தமிழக அரசு தொடங்கியது. இடம் தேர்வு செய்யப்பட்ட பின், விளையாட்டு நகரம் அமைப்பதற்கு உண்டான பணிகள் விரைவில் தொடங்கப்படும். முதற்கட்டமாக 150 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைவதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இடத்தை தேர்வு செய்வதில் சிக்கல்
ஆனால் செங்கல்பட்டில் விளையாட்டு நகரத்திற்கான இடத்தை தேர்வு செய்ய எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. விளையாட்டு நகரம் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தும் இடத்தை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

திருச்சிக்கு மாற்றம்
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், செங்கல்பட்டில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் உள்ளது. இதனால் சென்னையில் இடம் கிடைக்காத பட்சத்தில் திருச்சியில் விளையாட்டு நகரம் அமைக்க திட்டமிடப்படும் என்று தெரிவித்தார்.

செங்கிப்பட்டியில் இடம்
தொடர்ந்து, தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இதனைப் பயன்படுத்தி தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் வெற்றி வாகை சூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications