சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க பெங்களூர் நீதிமன்றம் கடிதம்
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பெங்களூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு தமிழக லஞ்சஒழிப்புத் துறைக்கு சமூக ஆர்வலர் கடிதம் எழுதியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை 18 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என கடந்த 2017ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் வரும் நிதியை கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கிற்கு செலவிட்ட தொகையை அரசு ஈடு செய்ய வேண்டுமென பெங்களூர் மாநகர சிவில் நீதிமன்றத்தில் ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு சரியானது.
உடனடியாக கர்நாடகா அரசு மற்றும் நீதித் துறை சிறப்பு வழக்கறிஞரை நியமித்து அனைத்து சொத்துகளையும் ஏலம்விட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வழக்கறிஞர் கிரண் ஜவாலியை கர்நாடகா அரசு நியமித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் நரசிம்ம மூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது தங்கம், வைரம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் பதித்தது என ஜெயலலிதாவின் 30 கிலோ நகைகள் மட்டும் கர்நாடகா அரசின் கருவூலத்தில் உள்ளது. மீதமுள்ள பொருட்களின் விவரங்கள் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த வழக்கு விசாரணையை தொடங்கிய தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் உள்ள ஜெயலலிதாவின் மற்ற பொருட்களை சட்டப்படி விரைந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் நடந்த சோதனையின் போது வைரம், முத்து உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகள், 7- கிலோ வெள்ளி பொருட்கள் 11 ஆயிரம் பட்டுப்புடவைகள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 146 அலங்கார சேர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications