+2 ரிசல்ட்: சைலண்டா நடக்கும் மாற்றத்தை கவனிச்சீங்களா? தொடர்ந்து அதிகரித்து வரும் தேர்ச்சி விகிதம்!
சென்னை: கடந்த 4 ஆண்டுகளாகவே, பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த வருடம் 0.49% அளவுக்கு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. பாஸ் பர்சன்டேஜ் தொடர்ந்து அதிகரித்து வருவது நல்ல மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். அதன்படி, தேர்வு எழுதிய 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகளில் 95.03% பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

தேர்ச்சி விகிதம்
பிளஸ் 2 தேர்வில் 95.03 % மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். எப்போதும் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள்: 96.70 %, மாணவர்கள்: 93.16 % தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை காட்டிலும் 3.54% கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர்.
பள்ளி வாரியான தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகள் - 91.94%
அரசு உதவிப் பெறும் பள்ளிகள் - 95.71%
தனியார் பள்ளிகள் - 98.88%
இருபாலர் பள்ளிகள் - 95.30%
பெண்கள் பள்ளிகள் - 96.50%
ஆண்கள் பள்ளிகள் - 90.14%
அதாவது, ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகள் இந்த ஆண்டு 6.36 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கின்றன.
தேர்ச்சி விகிதம் அதிகம்
கடந்த ஆண்டில் பதிவான 94.56 தேர்ச்சி சதவிகிதத்தை காட்டிலும், நடப்பு ஆண்டில் 0.49 சதவிகிதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. சதவிகித அடிப்படையில் பார்க்கும்போது அரை சதவிகிதம் என்பது சிறியது போல தெரிந்தாலும், சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் இந்த தேர்ச்சி விகித அதிகரிப்பு முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு
முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டில் 7.60 லட்சம் மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 7.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 94.56 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். 2 ஆயிரத்து 478 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பதிவு செய்தன. மாவட்ட வாரியாக 97.45 சதவிகித தேர்ச்சியுடன், மாநில அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்து இருந்தது.
2023
அதற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,03,385 மாணவ மாணவிகள் தேர்வெழுதினர். அதில் 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். அந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.03% என உயர்ந்தது.
2022ல்
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் 8,06,277 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 7,55,988 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அந்த ஆண்டில் 93.76% மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருந்தனர். கடந்த 4 ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வில், மொத்தம் 7,92,494 மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இந்த நிலையில், 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேர்ச்சி விகிதம் 95.03% ஆக தற்போது அதிகரித்து உள்ளது.












Click it and Unblock the Notifications