விஏஓ டூ விவசாயிகள்.. பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டம்.. இன்சூரன்ஸ் தேதி அவகாசம் நீட்டிக்கப்படுதா?
சென்னை: தொடர் அரசு விடுமுறைகள் காரணமாக, அடங்கல் பெற்று, பிரீமியம் செலுத்த முடியவில்லை என்பதால், காப்பீடு திட்ட கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டமானது, பருவநிலை மற்றும் நோய் தாக்குதல் காரணமாக பயிர் செய்திருக்கும் விவசாயிகள் நஷ்டமடைவதை பயிர்காப்பீடு தடுக்கிறது..

பயிர்க்காப்பீடு: விவசாயிகள் காப்பீடு செய்த விளை நிலங்களில் இயற்கை பேரழிவு மற்றும் பிற அறிவிக்கப்பட்ட அபாயங்கள் காரணமாக பயிர் இழப்பு ஏற்பட்டால், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
அந்தவகையில், இதுவரை 56.80 கோடிக்கும் மேலான விவசாயிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி, பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப, இந்த காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.
நெல் பயிர்கள்: ஒருவேளை, நெல் பயிர்களை விதைக்க இயலாத சூழ்நிலை காரணிகளுக்கு, விஏஓவிடம் விதைப்பு சான்றிதழ் பெற்று விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற முடியும்.. இந்த திட்டத்தில், அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் மற்றும் குறு வட்டாரங்களில் அறிவிக்கை செய்த பயிர்களை பயிரிடும் விவசாயிகள், குத்தகை விவசாயிகள் இணைய தகுதியானவர்கள் ஆவர்.
வங்கியில் பயிர் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ.36 ஆயிரத்து 500 ஆகும். விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.730 ஆகும்.
விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம். அத்துடன், காப்பீடு செய்யும்போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்த்து காப்பீடு செய்த பிறகு அதற்கான ரசீதையும் பெற்று கொள்ள வேண்டும் என்பது அடிப்படையான நடைமுறையாகும்.
அடங்கல்: அந்தவகையில், தற்போது பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் செப்டம்பர் 15 முதல் நவம்பர் 15 வரை நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கு, விவசாயிகள் விஏஓக்களிடம் அடங்கல் பெற்று, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு பிரீமிய தொகையை கட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதில், ஏக்கருக்கு ரூ.30,120 இழப்பீடு தொகையாக வழங்கப்படும்.. இதற்கான பிரீமிய தொகையாக ஏக்கருக்கு ரூ.451.80 வீதம் செலுத்த வேண்டும்.
ஆனால், அந்த தொகையை அனைவராலும் செலுத்த முடியவில்லை.. காரணம், தீபாவளி, ஆயுதபூஜை விடுமுறை வந்ததால் அலுவலகங்கள், தேசிய மற்றும் தொடக்க கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பிரீமிய தொகையை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. மேலும், பெரும்பாலான மாவட்டங்களில் அடங்கல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தன.
கால அவகாசம்: பிரிமியம் தொகை செலுத்த நாளை அதாவது நவம்பர் 15ம் தேதியே கடைசி தேதியாகும்.. எனவே, பிரீமிய தொகை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று விஏஓ மற்றும் விவசாயிகள் சங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம், கடலுார், புதுக்கோட்டை போன்ற மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து வைத்த கோரிக்கையின் விளைவாக மேற்கண்ட கலெக்டர்கள் அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்களாம்.. எனவே, மாநில அரசு, மத்திய அரசிடம் ஆலோசனை செய்து, கால அவகாசம் வழங்குவது குறித்து முடிவு செய்யும் என்று வேளாண்மை துறை அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications