பிரதமரின் சூரியசக்தி மின் திட்டம்.. தமிழ்நாட்டு விவசாயிகளிடையே ஆர்வம் இல்லை.. என்ன காரணம்?
சென்னை: பிரதமரின் இந்த சூரியசக்தி மின் திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாது இருக்கிறது. விவசாயிகளிடம் இருந்து, 420 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் வாங்க அழைப்பு விடுத்ததில், ஏழு பேர், 11 மெகா வாட்டிற்கு தான் விருப்பம் தெரிவித்தாக தமிழக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மஹாபியன் யோஜனா என்று இந்தியில் அழைக்கப்படும் PM KUSUM திட்டம் மத்திய அரசால் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறையில் டீசலை நீக்குவதற்கான ஆதாரங்களை வழங்கவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு, வழிகாட்டுதல்கள் விதிமுறைகளும் வெளியிடட்பபட்டன. நாடு முழுவதும் சோலார் பம்புகள் மற்றும் பிற புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருந்தது.

அந்த திட்டத்தின் படி, விவசாயி தனியாக அல்லது பல விவசாயிகள் சேர்ந்து, தங்களின் நிலத்தில் 500 கிலோ வாட் முதல் 2 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க வேண்டும்.. அதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்தலாம். தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்திற்கும் விற்கலாம். இதனால் விவசாயிகளுக்கு ஆண்டு முழுதும் நிரந்தர வருவாய் கிடைக்க ஒரு வாய்ப்பு ஏற்படும் என்று மத்திய அரசு கருதியது.
தமிழகத்தில் பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் விவசாயிகளிடம் இருந்து, அதிகபட்சம், யூனிட்டுக்கு 3.30 ரூபாய் என்ற விலையில், 420 மெகா வாட் வாங்க மின் வாரியம் 'டெண்டர்' கோரியிருந்தது. இதுவரை ஏழு பேர், 11 மெகா வாட்டிற்கு தான் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனை மின் வாரியம் ஏற்கும்பட்சத்தில், 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது..
விவசாயிகளிடம் கூடுதல் விலையில் மின்சாரம் வாங்குவதற்கு இழப்பீடாக, மத்திய அரசு, கொள்முதல் அடிப்படையிலான ஊக்கத்தொகை என்ற பெயரில், 1 யூனிட்டிற்கு 40 காசு அல்லது 1 மெகா வாட்டிற்கு ஆண்டுக்கு 6.60 லட்சம் ரூபாய் வழங்கும் அல்லது இரண்டில் எது குறைவோ, அந்த தொகையை, மின் வாரியத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கும் என்று அறிவித்துள்ளது.
இதனிடையே பிரதமரின் இந்த சூரியசக்தி மின் திட்டம் தொடர்பாக, விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையே இருக்கிறது.
நாட்டில் விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக இல்லாத நிலையில் அவர்களுக்கு மாற்று வருமானத்தை உருவாக்க விரும்பிய மத்திய அரசு அதற்கு பல்வேறு திட்டஙகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சூரியசக்தி மின் திட்டம் நல்ல திட்டமாக பார்க்கப்படுகிறது. 35 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய பம்புகளை சூரிய ஒளி மூலம் பயன்படுத்த மத்திய அரசு விரும்பியது. இத்திட்டம் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் சோலார் நீர் பம்புகளை நிறுவுவதன் மூலம் சூரிய ஆற்றலைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது.ஆனால் அந்த திட்டம் இன்னமும் மக்களிடையே போய்சேரவில்லை என்றே சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications