கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகை தர உள்ளார். ஆனால் இன்னும் பாஜகவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட ரோடுஷோ - பிரசாரத்தை திடீரென 'கேன்சல்' செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் ஒதுக்கி ஒருவாரம் கடந்தாலும் கூட இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. பாஜக சார்பில் தொகுதி வாரியாக வேட்பாளர்களை அறிவிப்பதில் கடும் குழப்பம் நிலவி வருகிறது.

இதனால் பாஜக மேலிடம் கலங்கிப்போய் உள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுகவிடம் பெறவில்லை என்றும், தற்போது ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாஜகவால் வேட்பாளர்களை நிறுத்தி ஜெயிப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும் தொண்டர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் சீட்டுகளை பெற பாஜக மூத்த தலைவர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி
இதனால் தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. வரும் 6ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவுக்கு வர உள்ளது. இப்படியான சூழலில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இது பாஜக தொண்டர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.
2 நாள் மோடி பயணம்
இதற்கிடையே தான் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை சென்னை வர உள்ளார். ஏப்ரல் 3ம் தேதியான நாளை மதியம் பிரதமர் மோடி விமானத்தில் சென்னை வருகிறார். அதன்பிறகு அங்கிருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி மதியம் 3 மணியளவில் அங்குள்ள அஜந்தா சிக்னல் சந்திப்பு முதல் அண்ணா சதுக்கம் வரை 2 கிலோமீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடி ரோடுஷோ நடத்துகிறார். அதன்பிறகு அவர் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
சென்னை ரோடுஷோ - பிரசாரம் ரத்து
பிறகு மீண்டும் சென்னை வந்து தனியார் ஹோட்டலில் இரவு நேரத்தில் ஓய்வெடுக்க உள்ளார். பிறகு ஏப்ரல் 4ம் தேதியான நாளை மறுநாள் மதியம் பிரதமர் மோடி சென்னையில் இருந்து கேரளா செல்ல உள்ளார்.
இதற்கிடையே தான் சென்னையில் இருக்கும் பிரதமர் மோடி மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் மற்றும் ரோடுஷோ நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது வரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதனால் பிரதமர் மோடி ரோடுஷோ, பிரசாரம் உள்ளிட்டவற்றை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.
மோடி கடும் அப்செட்
மாறாக ஏப்ரல் 4ம் தேதியான சனிக்கிழமை பிரதமர் மோடி தேர்தல் பணி தொடர்பாக மட்டும் தமிழக பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தற்போதைய சட்டசபை தேர்தல் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர்கள் மீது கடும் அப்செட்டில் உள்ளார்.
இதனால் தேர்தல் முடிவடைந்த பிறகு தமிழக பாஜகவில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications